கிறிஸ்துமஸில் “சங்கு சக்கரம்”.. டெல்டா, தென் மாவட்டத்தில் கொட்டப்போகும் கனமழை - உங்க ஊரில் பெய்யுமா?
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நாளான டிசம்பர் 25 ஆம் தேதி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், 26 ஆம் தேதி பெரும்பாலான தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் எனவும் சென்னை வானில் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை வானில் ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "நேற்று தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை (22-12-2022) 0830 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு - தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகரக் கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - தென்மேற்கு திசையில் இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும்.
வில்லனை காணோமே! கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை! கிறிஸ்துமஸ் அன்று மழை வருமா.. வெதர்மேன் அப்டேட்
மழைக்கு வாய்ப்பு
இதன் காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாளான டிசம்பர் 24 ஆம் தேதி தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டெல்டாவில் கனமழைக்கு வாய்ப்பு
டிசம்பர் 25 ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தென்மாவட்டங்களில் கனமழை
26 ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்
அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்." என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மழை அளவு
தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 5, திருப்பூண்டி (நாகப்பட்டினம்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்) தலா 4, திருவாடானை (ராமநாதபுரம்), கோடியக்கரை (நாகப்பட்டினம்), பேராவூரணி (தஞ்சாவூர்) தலா 2, நாகுடி (புதுக்கோட்டை), வாலிநோகம் (ராமநாதபுரம்), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), நாகப்பட்டினம், திருக்குவளை (நாகப்பட்டினம்), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 1.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
இன்ற தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
65 கி.மீ வேகத்தில் சூறாவளி
நாளை முதல் 25 ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கடலுக்கு செல்ல வேண்டாம்
26 ஆம் தேதி தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் மேற்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.