மாண்டஸ் கரையைக் கடந்தாலும் நீடிக்கும் மழை..சென்னையில் தேங்கிய வெள்ளம்..எங்கு எவ்வளவு மழை
சென்னை: மாண்டஸ் புயல் பல பகுதிகளில் காற்று மழையோடு கரையை கடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 142 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனிடையே அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்கக்கடலில் தீவிர புயலாக உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு 9 மணி முதல் மெதுவாக கரையைக் கடக்கத் தொடங்கியது. அப்போது பல பகுதிகளில் பலத்த காற்று வீசியது. அதிகாலை 3 மணிக்கு புயல் கரையைக் கடந்தது.
மாண்டஸ் புயலால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் பாதிக்கப்பட்டன. கடற்கரை பகுதியில் இருந்த கடைகள் காற்றின் வேகத்தில் சின்னாபின்னமாகின.
கடற்கரை சாலைகள் முழுவதும் மணலால் மூடப்பட்டுள்ளன. சென்னை பட்டினம்பாக்கத்தில் கனமழை காரணமாக சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது.
வங்கக் கடல் டூ சென்னை! மாண்டஸ் புயல் கடந்து செல்லப் போகும் பாதை! இத்தனை விஷயங்கள் இருக்கா?
திருவள்ளூர்
இந்த ஆண்டுக்கான பருவமழையில் உருவான முதல் புயலான மாண்டஸ் காரணமாக டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போதிய மழையை கொடுக்காமல் இந்த புயல் சென்றுவிட்டது. திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 142 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
எங்கு எவ்வளவு மழை
நள்ளிரவு செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன், காட்டுப்பாக்கத்தில் 142 மில்லிமீட்டரும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 106 மில்லிமீட்டர் மழையும் பதிவானதாக தெரிவித்தார். மீனம்பாக்கத்தில் 103 மில்லிமீட்டரும், மாதவரத்தில் 87 மில்லிமீட்டரும், திருவள்ளூரில் 83 மில்லிமீட்டர் மழையும் பதிவானதாக கூறினார்.
பலத்த காற்று
சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாகத்தில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக தெரிவித்தார். மழையால் சென்னை நகரின் பல பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பிற்பகல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாண்டஸ் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை, செங்கல்பட்டு உட்பட 15ககும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் இந்த தேர்வுகள் மற்றொரு நாளில் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதேபோல் இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்வு குறித்த தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என சென்னை பல்கலைகழகம் கூறியுள்ளது. மேலும் இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுள்ளது. அதே கால அட்டவனைப்படி தேர்வுகள் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
வனத்தொழில் பழகுநர் தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (Forest Apprentice) (தொகுதி VI) பதவி நியமனத்திற்கான தேர்வு இன்று (டிசம்பர் 10) நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்த தேர்வு மாண்டஸ் புயல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
மழை நீடிக்கும்
செங்கல்பட்டில் வெள்ளி இரவு 10 முதல் 12 வரையிலான இரண்டு மணி நேரத்தில் சராசரியாக 13.13 மில்லி மீட்டர் மழை பதிவானது. புயல் கரையைக் கடந்தாலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிப்பதால் பலத்த மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 11 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
16ஆம் தேதி காற்றழுத்தம்
இதையடுத்து, 16ம் தேதி உருவாகும் காற்றழுத்தம் வலுப்பெற்று புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த புயல் அதிக மழை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புயல், கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.