Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'கங்கை' மட்டுமல்ல.. 'கடராமும்' கொண்டான்! மெய்சிலிர்க்க வைக்கும் ராஜேந்திர சோழனின் வரலாறு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழாவில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் ராஜேந்திர சோழனின் வரலாறு மறு நினைவுகூரப்பட்டு வருகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், தமிழ் நிலத்தை புலிக் கொடியுடன் ஒரு பேரரசன் ஆண்டான். அவன் பெயர், வரலாற்றின் பக்கங்களில் பொறிக்கப்பட்டிருந்தாலும், அவனது உண்மையான பிரம்மாண்டம் பலரால் அறியப்படவில்லை. அவன், தன் தந்தையின் நிழலில் வளர்ந்தவன் அல்ல; நாடே அறிந்த தனது தந்தையை மிஞ்சி, உலகமே அறிந்த ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்தவன். அவன் பெயர்தான், ராஜேந்திர சோழன்!

Rajendra Cholan tamil nadu

தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழனின் மகன் அவன். தந்தையின் போர்க்களங்களில், இளவரசனாகவே தன் வீரத்தை நிரூபித்தவன். தந்தையின் வெற்றிகளுக்குப் பின்னால் ஒரு பெரும் புயலாக மறைந்திருந்தான் ராஜேந்திரன். ஆனால், அவனது கனவுகள் தஞ்சையின் கோட்டைகளுக்குள் அடங்கவில்லை. அவை கடல்களைத் தாண்டி, கண்டங்களை வெல்லத் துடித்தன.

1014-ஆம் ஆண்டு, சோழப் பேரரசின் மணிமகுடம் ராஜேந்திரனுக்குச் சூட்டப்பட்டது. அப்போதுதான், சரித்திரம் காணாத ஒரு சகாப்தம் தொடங்கியது.

தன் தந்தை வட இலங்கையை மட்டுமே வென்றிருந்தார். ஆனால் ராஜேந்திரனோ, முழு இலங்கையையும் தன் காலடியில் கொண்டு வந்தான். அங்கு பல தலைமுறைகளாகப் பாண்டியர்களும் சேரர்களும் ஒளித்து வைத்திருந்த மணிமகுடங்களையும், இந்திரன் ஆரத்தையும் கைப்பற்றி, சோழர்களின் பரம எதிரிகளின் கர்வத்தை வேரோடு சாய்த்தான்.

ஆனால், அவனது பார்வை தெற்கோடு நிற்கவில்லை. வடக்கை நோக்கித் திரும்பியது. அதுவரை எந்த ஒரு தெற்கு பக்கத்து மன்னனும் நினைத்துக்கூடப் பார்க்காத ஒரு சாதனையைச் செய்யப் புறப்பட்டான். கங்கை நதியை நோக்கி ஒரு மாபெரும் படையை அனுப்பினான். வடக்கே கோலோச்சிய மன்னன் மகிபாலனைத் தோற்கடித்து, புனித கங்கையின் நீரைத் தமிழ் மண்ணுக்குக் கொண்டு வந்தான். அந்த வெற்றிக்குச் சான்றாக, "கங்கை கொண்ட சோழன்" என்ற பட்டத்தைச் சூடிக்கொண்டான். கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஒரு புதிய தலைநகரையே உருவாக்கினான்.

நிலத்தில் அவன் புலியைப் போலப் பாய்ந்தான் என்றால், கடலில் அவன் ஒரு சுறாவைப் போலச் சீறினான். இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரு மன்னன் தன் பெரும் படையை கடல் கடந்து அயல்நாடுகளுக்கு அனுப்பினான்.

சோழர்களின் கப்பற்படை, சீறும் அலைகளைக் கிழித்துக்கொண்டு மலேசியா, இந்தோனேசியா, சுமத்ரா தீவுகளை நோக்கிப் பாய்ந்தது. கடாரம் என்றழைக்கப்பட்ட இன்றைய மலேசியப் பகுதியை வென்று, "கடாரம் கொண்டான்" என சரித்திரத்தில் நிலைபெற்றான். அவனது கடற்படை, இந்தியப் பெருங்கடலையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நடந்த வர்த்தகத்தின் கடிவாளம், சோழர்களின் கைகளில் வந்தது.

உலகம் முழுவதும் தன் புலிக்கொடியை நாட்டிய அந்தப் பேரரசனுக்குப் பின்னால் ஒரு பெரும் குடும்பம் இருந்தது. அவனது பட்டத்தரசிகளாக வானவன் மாதேவி, முக்கோலான், வீரமாதேவி போன்றோர் விளங்கினர். அவனுக்கு ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன் என மூன்று மகன்கள். மூவருமே தந்தையைப்போல மாவீரர்களாக விளங்கினர். தந்தைக்குப் பிறகு சோழப் பேரரசின் புகழைக் கட்டிக்காத்தனர். அம்மங்காதேவி என்ற மகளும் இருந்தார். இவள் வழிவந்தவனே, பின்னாளில் முதலாம் குலோத்துங்க சோழனாகப் பேரரசை ஆண்டான்.

ராஜேந்திர சோழன் என்ற அந்த மாபெரும் சூரியன் 1044-ஆம் ஆண்டு அஸ்தமித்தது. திருவண்ணாமலை அருகில் உள்ள பிரம்மதேசம் எனும் ஊரில் ராஜேந்திர சோழன் உயிர் நீத்தார். அவன் மறைந்த செய்தி கேட்ட அவனது பட்டத்தரசிகளில் ஒருவரான வீரமாதேவி, தன் கணவனுடன் உடன்கட்டை ஏறி தன் உயிரையும் தியாகம் செய்தாள்.

ராஜேந்திர சோழன், ஒரு மாபெரும் வீரன் மட்டுமல்ல; அவன் ஒரு ராஜதந்திரி, ஒரு தொலைநோக்குப் பார்வையாளன். அவனது ஆட்சியில், சோழப் பேரரசு அதன் உச்சத்தை அடைந்தது. இன்று நாம் காணும் பல நாடுகள், அன்று அவனது காலடியில் இருந்தன. அவன் வெறும் ஒரு மன்னன் அல்ல. அவன் ஒரு பேரரசன். தமிழ் இனத்தின் பெருமையை உலகறியச் செய்தவன். கடல்களை ஆண்டவன். கங்கையை வென்றவன். ராஜேந்திர சோழனின் கதை, வெறும் வீரக்கதை அல்ல. அது, ஒவ்வொரு தமிழனும் மெய்சிலிர்த்து நினைவுகூர வேண்டிய ஒரு மாபெரும் வரலாறு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+