ஹெலிகாப்டரில் பறந்து சென்று பிரச்சாரம்... ஜெயலலிதா பாணியில் ரஜினிகாந்துக்கு தயாராகும் ஏற்பாடுகள்..!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு ஹை டெக் முறையில் பரப்புரை முன்னேற்பாடுகள் திட்டமிடப்பட்டு வருகின்றன.
ஹோலோகிராபிக் எனப்படும் முப்பரிமாண காட்சி வடிவில் பரப்புரை, ஹெலிகாப்டரில் பறந்து சென்று பரப்புரை, எல்.இ.டி. திரைகள் கொண்ட வாகனங்கள் மூலம் பரப்புரை என திட்டமிடல்கள் மும்முரமாக இருக்கின்றன.
வரும் ஜனவரி மாதம் இறுதியில் இருந்தே ரஜினிகாந்த் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிடுவிடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தல்
தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இந்த சட்டமன்றத் தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கருணாநிதி, ஜெயலலிதா என இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இது அக்னிப்பரீட்சையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த இரு கட்சிகளுக்கும் இடையேயான போட்டி தான் இதுவரை நிலவி வந்தது.

அரசியல்
முதல்முறையாக நடிகர்கள் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ளனர். இதனால் இந்த முறை போட்டி சற்று கடினமாகவும் தேசியளவிலான கவனத்தையும் தமிழகம் ஈர்த்துள்ளது. சரி விஷயத்திற்கு வருவோம், நடிகர் ரஜினிகாந்தை பொறுத்தவரை தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கத்தான் விரும்பினார்.

பிரத்யேக குழு
இருப்பினும் அவரது நலன் விரும்பிகளும், அன்பர்களும், ரசிகர்களும் விடுத்த அன்புக்கட்டளை காரணமாக வேறு வழியின்றி அரசியல் என்ட்ரி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனிடையே மருத்துவர்கள் அறிவுரைப்படி மிகுந்த கவனத்துடன் அவரது அரசியல் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பிரச்சாரம் என்பது தேர்தலுக்கு இன்றியமையாதது என்பதால் அதில் ரஜினியை எப்படி பங்கேற்க செய்வது என்பது பற்றியும் அவரால் நியமிக்கப்பட்ட பிரத்யேக குழு ஆலோசித்து வருகிறது.

லைவ் ரிலே
மாலை நேர பிரச்சாரங்களை தவிர்த்து ஜெயலலிதா பாணியில் பகல் நேர பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்றும் அந்தப் பிரச்சாரத்துக்கு சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் சென்றுவிட்டு அன்றைய தினமே ரஜினி சென்னை திரும்பும் வகையிலும் திட்டமிடல்கள் நடந்து வருகின்றன. மேலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களான மதுரை, கோவை, திருச்சி,சேலம், நெல்லை, என இந்த ஊர்களுக்கு மட்டும் ரஜினியை நேரடியாக விசிட் அடிக்க வைத்துவிட்டு ஊரகப்பகுதிகளில் முப்பரிமாண காட்சி வடிவில் லைவ் ரிலே செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர வழக்கம் போல் டிஜிட்டல் ஊடகம் வழியாகவும் பரப்புரை நிகழவுள்ளது.












Click it and Unblock the Notifications