ஆளுநர் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கணும்.. “சிக்கலுக்கு காரணமே அவர்தான்” - கொதித்த ராமதாஸ்!
சென்னை : அமைச்சரவை தீர்மானத்தை அப்போதே ஆளுநர் ஏற்றுக் கொண்டிருந்தால் 7 பேரும் அப்போதே விடுதலையாகியிருப்பார்கள். இப்போது 4 ஆண்டுகள் தாமதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையை மாற்ற அமைச்சரவையின் பரிந்துரை, தீர்மானம் ஆகியவற்றின் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பேரறிவாளன் வழக்கில் பிறப்பித்த உத்தரவு மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
7 பேர் விடுதலை தாமதமாக காரணமே ஆளுநர் ரவி தான்.. "மனசாட்சி இல்லாதவர்".. ஆவேசமாக பேசிய வைகோ!
மற்ற 6 பேர்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வந்த பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் யஸ் ஆகிய 7 பேரில் பேரறிவாளனை கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து இந்த வழக்கில் சிறையில் உள்ள மற்ற ஆறு பேரும் விடுதலை கோர சட்ட வழிவகை ஏற்பட்டது. அதன்படி நளினி மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரும் தங்களை விடுதலை செய்யக்கோரி தனித்தனியே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு
7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் காலதாமதம் செய்ததால், தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை ஏற்கனவே விடுதலை செய்தது போல ஆறு பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை ஏனைய ஆறு பேருக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மகிழ்ச்சியளிக்கும் தீர்ப்பு
ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், "ராஜிவ் கொலை வழக்கில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பிறகும் சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது!
ராமதாஸ் வரவேற்பு
6 தமிழர்களின் நன்நடத்தை, கல்வித் தகுதி மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது!" " எனத் தெரிவித்துள்ளார்.
அப்போதே ஆளுநர் ஏற்றிருந்தால்
மேலும், "6 தமிழர்களின் விடுதலைக்கு 09.09.2018-இல் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் தான் அடிப்படை. அமைச்சரவை தீர்மானத்தை அப்போதே ஆளுனர் ஏற்றுக் கொண்டிருந்தால் அப்போதே அவர்கள் விடுதலையாகியிருப்பார்கள். இப்போது 4 ஆண்டுகள் தாமதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்." என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்
மேலும், "அமைச்சரவையின் முடிவுகள் மீது ஆளுர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்படாதது தான் பல சிக்கல்களுக்கு காரணம் ஆகும். இந்த நிலையை மாற்ற அமைச்சரவையின் பரிந்துரை, தீர்மானம் ஆகியவற்றின் மீது ஆளுனர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்!" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.