24 மணி நேரமும் டாஸ்மாக்.. கோர்ட்டே தோலுரிச்சு காட்டிடுச்சே.. நேரத்தை மாத்துவீங்களா? சீறிய உதயகுமார்!
சென்னை : தமிழகத்தில் 24 மணி நேரமும் டாஸ்மாக் கடைகள் செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
டாஸ்மாக் மதுபான கடைகளின் விற்பனை நேரத்தை குறைக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில், அதுதொடர்பாக திமுக அரசை கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன எனச் சுட்டிக்காட்டியுள்ளார் உதயகுமார்.
இன்றைக்கு கணக்கில் அடங்காத பெட்டிக்கடை போல், மதுபான கடைகள் நாடெங்கும் திறக்கப்பட்டு இருக்கிறது, இதற்கு அதிகாரம் கொடுத்தது யார் என்று தெரியவில்லை என ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமரை பார்க்க போறீங்களா? அப்படியே இதையும் கேளுங்க.. முதல்வருக்கு பட்டியலை நீட்டிய ஆர்பி உதயகுமார்!
நாடு எங்கே போகுது
இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டிலே சட்ட விரோதமாக போதை பொருள் தடுப்பு நடவடிக்கை என்பது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிற சூழ்நிலையிலே, அதைவிட இன்றைக்கு அதிகாரப்பூர்வமாக டாஸ்மாக் கடைகள் 24 மணி நேரமும் செயல்படுவதை நாம் பார்க்கிறபோது, இந்த நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை தான் இந்த நாட்டு மக்கள் கேள்விக்குறி ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
24 மணி நேரமும்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இந்த தாய் திருநாடு, பாரம்பரியம் கலாச்சாரம் பண்பாடும்மிக்க இந்த தாய் தமிழ் இனம், இன்றைக்கு டாஸ்மாக் கடைகளிலே 24 மணி நேரமும் அங்கே காத்துக் கிடக்கிற அவலநிலை. இன்றைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உள்ள நீதியரசர்களே கேள்வி எழுப்பி உள்ளார்கள், டாஸ்மாக் கடையினுடைய நேரம் பொதுவாக 12 முதல் 10 மணி வரை என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கூட, 24 மணி நேரமும் செயல்படுகிறது, அது மட்டுமல்ல டாஸ்மாக் கடையில் விலை பட்டியலே கிடையாது, அந்த மதுபானங்களுக்கு விலை கூடுதலாக விற்கப்படுகிறது யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
2-8 மணி
21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சட்டப்படி மது விற்பனை செய்யக்கூடாது என்ற அறிவுறுத்தல் செய்யப்படுகிறதா, டாஸ்மாக் கடைகள் 2 மணி முதல் 8 மணி வரை செயல்பட பல்வேறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு நீதியரசர்கள் பட்டவர்த்தமாக, வெட்ட வெளிச்சமாக திமுக அரசை தோலுரித்துக் காட்டியுள்ளார்கள். மது விற்பனையில் பிற மாநிலங்களை விட தமிழகம் முன்னணியில் உள்ளது. கடைகள் செயல்படும் நேரத்தை மேலும் குறைத்தால் என்ன என்று இந்த அரசுக்கு பகிரங்கமாக நீதியரசர்கள் கேள்வி கேட்டிருப்பது என்பது இந்த அரசுக்கு தலைகுனிவு ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர்களுக்கு மது விற்பனை முற்றிலும் தடை செய்யப்படவில்லையா என்கிற ஆச்சரியமாக கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
டாஸ்மாக் பார் ஓடும் தமிழ்நாடு
டாஸ்மாக் நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க அரசு முன்வருமா என்று நீதியரசர்கள் இன்றைக்கு கேள்வி கேட்டிருக்கிறார்கள். பாலாறும் தேனாறும் ஓடிய தமிழ்நாட்டில், டாஸ்மாக் பார்கள் ஓடுகிற ஒரு அவல நிலை உள்ளது. பிள்ளைகளுக்கு மடிக்கணிணி கொடுத்து, கணினி புரட்சி ஏற்படுத்தி, வல்லரசு நாடுகளுக்கு இணையாக தமிழகத்தில் மாணவர்களை அறிவு ஆற்றல் மிகுந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கிய திட்டம் தந்த ஜெயலலிதா, 500 டாஸ்மாக் கடைகளை மூடினார்கள். அதனையடுத்து வந்த எடப்பாடியார் காலத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
கணக்கில் அடங்காமல்
இன்றைக்கு கணக்கில் அடங்காத பெட்டிக்கடை போல், மதுபான கடைகள் நாடெங்கும் இன்றைக்கு திறக்கப்பட்டு இருக்கிறது, இதற்கு அதிகாரம் கொடுத்தது யார் என்று தெரியவில்லை. மாவட்ட நிர்வாகத்தினுடைய எண்ணிக்கைக்கும், செயல்படுகிற மதுபான கடைகளுடைய எண்ணிக்கைக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. அரசு அதிகாரம் இல்லாமல், புற வழியில் அதிகாரத்தை இதற்கு அதிகாரம் கொடுத்தது யார் என்று கேள்வி இன்றைக்கு மக்கள் மத்தியில் விவாதத்தில் இருக்கிறது.
பாசாலை
நாடெங்கும் கல்விச்சாலைகள் செய்வோம் என்று சொன்ன இந்த தாய் தமிழ் நாட்டிலே, இன்றைக்கு பார்சாலைகளாக தமிழ்நாட்டுச் சாலைகள் மாறி இருப்பது வேதனையின் உச்சமாகும் .இளைய சமுதாயத்தை காப்பதற்கு நீதியரசர்கள் முன் வைத்திருக்கிற கேள்விகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு முன்வருமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.