வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92இல் மறுவாக்குப்பதிவு... இன்று மாலை ஓய்கிறது தேர்தல் பிரசாரம்
சென்னை: வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92இல் வரும் 17ஆம் தேதி மறுதேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாகக் கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 72.8% வாக்குகள் பதிவானது. மாநிலத்தில் மிகவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போறீங்களா? - என்னென்ன கட்டுப்பாடுகள் இதை படிச்சிட்டு போங்க
இருப்பினும், வேளச்சேரி தொகுதியில் அன்றிரவு மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வாக்குப்பதிவு இயந்திரம்
ஸ்கூட்டரில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்ற நபர்களை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், அவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். முதலில் அங்குப் பழுதான வாக்குப்பதிவு இயந்திரம் எனக் கூறப்பட்ட நிலையில், பின்னர் அந்த இயந்திரங்கள் சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெற்றது என்றும் அதில் 15 வாக்குகள் பதிவாகியிருந்தது என்றும் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.
ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தல்
இதனால் அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனக் காங்கிரஸ் உள்ளிட்ட பல வேட்பாளர்கள் வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92இல் 17ஆம் தேதி வாக்கிப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் மட்டும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதில் வாக்காளர்களின் இடது கையின் நடுவிரலில் மை வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தீவிர பிரசாரம்
தேர்தலில் ஒவ்வொரு வாக்குகளும் முக்கியமானது என்பதால் வேளச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த சில தினங்களாகவே அங்குத் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வந்தனர். வாக்குச்சாவடி எண் 92இல் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்குப் பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது. பிரசாரம் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அனைத்து வேட்பாளர்களும் அந்த பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
ஆண்கள் மட்டும்
முன்னதாக, மறுதேர்தல் நடைபெறும் இடத்தில் ஆண்கள் மட்டுமே மீண்டும் வாக்களிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் வெளியிட்ட அறிக்கையில், வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி ஆண் வாக்காளர்களுக்கானது. எனவே, இங்கு வாக்களிக்கத் தகுதி பெற்ற 548 ஆண்கள் மட்டும் மறுதேர்தலின்போது வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.