பதிவுத்துறை வரலாற்று சம்பவம்.. 1861 முதல் 1940-ம் ஆண்டு வரையிலான நில ஆவணங்கள் பெற புதிய இணையதளம்
சென்னை: பொதுமக்கள் நிலஆவணங்களை எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு அரசு ஆன்லைனில் நில ஆவணங்களை வழங்கி வருகிறது. அந்த சேவையில் அடுத்தகட்டமாக 1864 முதல் 1897-ம் ஆண்டு வரை (பழைய செட்டில்மென்ட் ரிஜிஸ்டர்) மற்றும் 1861 முதல் 1940-ம் ஆண்டு வரையிலான இனாம் உண்மை பதிவேடு இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. https://digitamilnaduarchives.tn.gov.in/ ஆவணக்காப்பக இணையதளத்தில் தகவல்களை பார்க்க முடியும்.
தமிழக அரசு பத்திரப்பதிவு துறையில் பல்வேறு மாற்றங்களை மக்களுக்கு வசதிக்காக செய்து வருகிறது. அந்த வகையில் பதிவுத்துறை இணையதளம் மூலம் பழைய ஆவணங்களை (வில்லங்க சான்றிதழ், பத்திரப்பதிவு நகல் போன்றவை) தேடிப் பெற சில வசதிகளை உருவாக்கி வைத்துள்ளது வீட்டில் இருந்தே பல்வேறு வகையான ஆவணங்களை பார்க்க முடியும். ஈசி போட்டு பார்த்தால் ஆவண விவரங்களை அறிந்து, நிலத்தின் உரிமையாளர்களை அறிய முடியும். ஏதும் வில்லங்கம் உள்ளதா என்பதையும் எளிதாக அறிய முடியும்.

தற்போதைய சூழலில் சுமார் 30, 40 வருடங்களுக்குள் உள்ள ஆவணங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி பெரும்பாலான ஆவணங்களை பெரும்பாலும் ஆன்லைனில் முழுமையாகப் பார்க்க முடிகிறது. அதேநேரம் மிகப்பழைய ஆவணங்கள் (உதாரணமாக, 1980-களுக்கு முந்தையவை) பெரும்பாலும் கையால் எழுதப்பட்டவை ஆகும்.
இந்த ஆவணங்கள் படிப்படியாக டிஜிட்டல்மயமாக்கப்பட்டு வருகீன்றன. இவற்றின் விவரங்களை ஆன்லைனில் ஓரளவு பார்க்க முடிகிறது. எனினும் முழுமையான நகல் வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று விண்ணப்பித்து பெற வேண்டிய நிலை உள்ளது.அதேநேரம் பழைய ஆவணங்களை பெற விரும்புவோருக்கு வசதிகளை அரசு செய்து வருகிறது. அந்தவ கையில் புதிய நடைமுறை வந்துள்ளது.
தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் சார்பில் 50-வது தேசிய ஆவணக்காப்பாளர்கள் குழு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வியாழக்கிழமை நடந்தது. இதில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்று, 'பொதுமக்கள் நிலஆவணங்களை எளிதில் பெறும் வகையில் முதற்கட்டமாக 1864 முதல் 1897-ம் ஆண்டு வரை (பழைய செட்டில்மென்ட் ரிஜிஸ்டர்) மற்றும் 1861 முதல் 1940-ம் ஆண்டு வரையிலான இனாம் உண்மை பதிவேடு இணையத்தில் பதிவேற்றப்பட்டு பொதுமக்கள் இருந்த இடத்திலேயே ஆவணங்களை பெறும் வகையில் www.digitamiinsduarchives.gov.in ஆவணக்காப்பக இணையதளத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.
இந்த கூட்டத்தில் தேசிய ஆவணக்காப்பக தலைமை இயக்குனர் சஞ்சய் ரஸ்தோகி, தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் பொ.சங்கர், தமிழ்நாடு ஆவணக்காப்பக முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் ஹர்சஹாய் மீனா, 20 மாநில ஆவணக்காப்பக அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் 'ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக 1857-ம் ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் தியாகங்கள்', 'மைசூர் போர்களும் தமிழ்நாடு கைப்பற்றப்பட்ட முறைகளும்' ஆகிய 2 நூல்களை அமைச்சர் கோவி செழியன் வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications