அதிகார சபைக்குள் சென்றதில்லை.. அரசியலமைப்பு சட்டத்தையே திருத்தச் செய்தவர் பெரியார்.. சமூக நீதி நாள்!
சென்னை : தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படுகிறது. தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாளான இன்று, மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் என்கிற அவரது கொள்கைத் தீபத்தை நெஞ்சில் ஏந்துவோம்!
இன்றளவும் சாதி வேற்றுமையும், பெண்ணடிமைத்தனமும் புரையோடிப் போயிருக்கும் சமூகத்தில் சமத்துவம் உண்டாக இயன்றவரை பாடுபட்ட பெரியாரின் கனவை நமக்கெல்லாம் நினைவூட்டும் நாளாகவே இந்நாள் இருக்கிறது.
இந்தியா முழுவதும் சமூக நீதி பரவுவதற்கு அடித்தளம் அமைத்தவர் பெரியார். தான் வாழ்ந்த காலம் அனைத்தும் சமூக நீதிக்காக உழைத்த பெரியாரின் பிறந்த நாள் கடந்த ஆண்டு முதல் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
சமூக நீதி நாளையொட்டி, ஒரு உறுதிமொழியும் தமிழக அரசால் முன்மொழியப்பட்டது. அந்த உறுதிமொழியில் இடம்பெற்றுள்ளவற்றை வெறும் வார்த்தைகளாக அல்லாமல், ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கையில் கடைபிடித்தால் சமூக நீதி எங்கும் பரவும் என்பதில் ஐயமில்லை.
ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம்! பெரியார் 144வது பிறந்தநாள் நாளை! கோலாகலமாக கொண்டாடும் தமிழக அரசு!
சாதி - பெண்ணடிமைத்தனம் ஒழிய பாடுபட்ட பெரியார்
மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரிநிகர்சமம் ஆகியவற்றையே தனது வாழ்நாள் எங்கும் பல்வேறு வடிவங்களில் உரையாற்றிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருந்தார் தந்தை பெரியார். இந்தியாவில் எங்கும் புரையோடிப்போயிருந்த சாதியையும், பெண்ணடிமைத்தனத்தையும் ஒழிக்க தன் கைத்தடியை எடுத்தார் பெரியார். அதற்குத் தடையாக முன்னின்ற அனைத்தையும் கேள்விகளால் உடைத்தார் பெரியார்.
பெரியாரின் கைத்தடி
சாதிய ஏற்றத்தாழ்வை ஊக்குவிக்கும் கோவில்களை நோக்கிக் கேள்வி கேட்டார். மூடநம்பிக்கைக்கு எதிராக அறிவியலை முன்வைத்தார். எதையும் பகுத்தறியச் சொன்னார். ஒரு நூற்றாண்டு காலத்தில் தமிழகத்தின் சமூக நிலை வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது அவரது கொள்கைகளே எனலாம். இன்றளவும் சமூக நீதி, சமதர்மத்திற்கு இழுக்கு நேரும் போதெல்லாம், அவற்றை அடித்து நொறுக்க துணைக்கு அழைக்கப்படுகிறது பெரியாரின் கைத்தடி. எதிர்காலத்திற்கும் பாதை அமைத்துக் கொடுத்த சீர்திருத்தவாதி அவர்.
சட்ட மன்றத்துக்குச் செல்லாமல்
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளை வழங்கும் சமூகநீதிக் கொள்கை நீதிமன்றத்தால் முடக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து மக்களை அணி திரட்டிப் போராடி, முதன் முதலாக அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்ய வைத்தவர், அந்த அதிகார மன்றத்திற்குள் ஒருநாளும் சென்றிராத தந்தை பெரியார் தான்.
சிலையாகவும் சர்ச்சைகளில்
அவரது போராட்டங்களின் விளைவாகவே வகுப்புவாரி ஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மக்கள் தொகை விகிதாச்சாரப்படி இடஒதுக்கீடு கிடைத்தது. அரசுப் பொறுப்பு எதையும் வகிக்காத பெரியார் தான் மறைந்து இத்தனை ஆண்டு காலம் கடந்த பிறகும் அரசியலை ஆட்டிப் படைக்கிறார். இன்று வரை சிலையாகவும் கூட சர்ச்சைகளுக்கு உள்ளாகிறார்.
சமூக நீதி
இந்திய அளவில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் முன்னோடியாக தமிழ்நாடு இருக்கக் காரணம் பெரியாரின் கொள்கைகளை இங்குள்ள அரசியல் கட்சிகளும், ஆட்சியாளருகளும் தொடர்ந்து முன்னெடுத்ததே எனக் கூறலாம். அடிமைத்தனத்தை வெறுத்து, சுயமரியாதையை உயிர் மூச்சாகப் படிப்பித்த பெரியாரின் உரைகளும், எழுத்துகளும் எதிர்கால சமூகத்தினருக்கும் பாடமாக அமைபவை. அவற்றை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.
சமூக நீதி நாள்
தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ஆம் நாளை ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக கொண்டாடுவோம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் அறிவித்தார். சாதிய ஏற்றத் தாழ்வுகள், தீண்டாமைக் கொடுமைகள், மத வேறுபாடுகளை உதறித் தள்ளுவோம் என உறுதியேற்கும் வகையில் உறுதிமொழியையும் தயாரித்து வெளியிட்டது தமிழக அரசு. அந்த உறுதிமொழி, சமூக நீதி நாளான இன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் எடுக்கப்படும்.
சமூக நீதி நாள் உறுதிமொழி
அந்த உறுதிமொழி:
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் -
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும்
எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!
சுயமரியாதை ஆளுமைத் திறனும் -
பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக
என்னுடைய செயல்பாடுகள் அமையும்!
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக
என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன் !
மானுடப் பற்றும் மனிதாபிமானமுமே
எனது இரத்த ஓட்டமாக அமையும்!
சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும்
எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன் !"