கிசுகிசு வதந்தியை படிச்சிட்டு வந்து.. துண்டு போட்டு வைக்கிறீங்களா? கட்சியினரை கலாய்த்த உதயநிதி
சென்னை: முதல்வரின் வெளிநாட்டு பயணத்திற்கு முன்பாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலவர் பொறுப்பு கொடுக்கப்படலாம் எனவும் பரவலாக சொல்லப்பட்ட நிலையில் உதயநிதி இதற்கு பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மகனும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவ்வப்போது இது தொடர்பாக கட்சியினர் பலரும் வெளிப்படையாகவே கோரிக்கை வைப்பதை காண முடிந்தது. ஆனால், இந்த தகவல்களை உதயநிதி ஸ்டாலின் மறுத்து பேசியிருந்தார்.

இந்த நிலையில்தான், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி கொடுக்கப்படலாம் என்ற ஒரு பேச்சு எழுந்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளார். முதலில் இம்மாதம் 22ம் தேதி அவர் அமெரிக்காவுக்குச் செல்ல உள்ளதாகக் கூறப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் அந்த பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின கொண்டாட்டத்தை எல்லாம் முடித்துவிட்டு அடுத்த மாதம் அமெரிக்காவுக்குச் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஆகஸ்ட் 22ம் தேதி முதல்வரின் அமெரிக்கா பயணம் அமையலாம் எனக் கூறப்படுகிறது. முதல்வரின் வெளிநாட்டு பயணத்திற்கு முன்பாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலவர் பொறுப்பு கொடுக்கப்படலாம் எனவும் பரவலாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவி விவகாரம் குறித்து பேசியுள்ளார். திமுக இளைஞரணியின் 45-வது ஆண்டு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- "நான் துணை முதல்வராவேன் என்று வரும் தகவல்கள் வதந்தியே. ஊடக வதந்திகளை நம்பி சிலர் இப்போதே துண்டு போட்டு வைக்கின்றனர்.
அமைச்சர்கள் அனைவருமே முதல்வருக்கு துணையாக இருப்போம். எந்த பதவிக்கு சென்றாலும் இளைஞரணி பதவியே நெஞ்சுக்கு நெருக்கமாக உள்ளது. பொறுப்புகள் மாற்றம் குறித்து முதல் அமைச்சர் முடிவு செய்வார். 2026 சட்டமன்ற தேர்தலில் என்னென்ன கூட்டணி வந்தாலும் சரி திமுக வெற்றி பெறுவது உறுதி" என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:- முதல்வருக்கு துணையாக நான் வரவேண்டும் என்று தீர்மானம் எல்லாம் நிறைவேற்றினீர்கள்.. பத்திரிகையில் வரும் கிசுகிசுக்கள், வதந்திகளை படித்துவிட்டு வந்து.. இது நடக்க போகுதோ... அப்போ நாம ஒரு கோல் போட்டு வைப்போம்.. துண்டு போட்டு வைப்போம் என்ற அடிப்படையில் நீங்கள் பேசியிருக்கிறீர்கள்..
எப்படி தலைவர் எந்த பொறுப்புக்கு சென்றாலும் இளைஞர் அணி தலைவர் என்ற பொறுப்புதான் மனதுக்கு நெருங்கிய பொறுப்பு என சொல்லியிருக்கிறார். அதேபோல எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும் எனது மனதிற்கு நெருங்கிய பொறுப்பு இளைஞரணி செயலாளர் பொறுப்புதான்.. எனவே எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறந்துவிட மாட்டேன்..
எடுக்க வேண்டிய பணிகள் ஏராளம். நாடாளுமன்ற தேர்தலில் எப்படி வெற்றிக்காக உழைத்தோமோ.. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எப்படி வெற்றிக்காக உழைத்தோமோ.. அதேபோல 2026 தேர்தலிலும் தமிழக அரசின் சாதனைகளை எல்லாம் சொல்ல வேண்டும்.. பெண்களிடத்தில் திமுகவிற்கு நல்ல பெயரை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 2026 என்ன நடந்தாலும் சரி.. என்னென்ன கூட்டணி வந்தாலும் சரி.. ஜெயிக்க போறது நம்முடைய தலைவர் ஸ்டாலின் தான். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications