அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை போல் மெட்ரிக் பள்ளிகளிலும் கட்டாயம் இடஒதுக்கீடு.. தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் கட்டாயம் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மாநில அரசின் 69 சதவீதம் இடஒதுக்கீடு அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஒதுக்கீடு சதவீதம் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பொதுப் பிரிவில் 31 சதவீதம், எஸ் டி 1 சதவீதம், எஸ் சி 18 சதவீதம், எம்பிசி 20 சதவீதம் , பிசிஎம் 3.5 சதவீதம், பிசி 26.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பொதுப் பிரிவினருக்கு 31 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து பிரிவினருக்கும் ஏற்ற வகையில் பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு அடிப்படையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறுகிறதா என்பதை முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மெட்ரிக் பள்ளிகள் உள்பட மாநில அதிகார வரம்பின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர் சேர்க்கை மாநில அரசு வரையறுத்துள்ள இடஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.