சென்னை கலெக்டரின் கையெழுத்தை போட்டு.. பல லட்சம் பறித்த வருவாய் துறை அதிகாரிகள்.. சிக்கியது எப்படி?
சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவின் கையெழுத்தை போலியாக போட்டு வங்கி கணக்கில் ரூ.11.50 லட்சம் மோசடி செய்த குற்றச்சாட்டில் வருவாய்த்துறை அதிகாரிகள் பிரமோத் மற்றும் சுப்பிரமணி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.. பிரமோத், சுப்பிரமணி இருவரும் சேர்ந்து காசோலைகளில் மாவட்ட கலெக்டரின் கையெழுத்தை போலியாக போட்டு, போலி ரப்பர் ஸ்டாம்ப் பயன்படுத்தி தயார் செய்ததாக கைதாகி உள்ளார்கள்.
சென்னை கலெக்டர் அலுவலகம் பாரிமுனை ராஜாஜி சாலையில் செயல்பட்டு வருகிறது. சென்னை கலெக்டராக ரஷ்மி சித்தார்த் ஜகடே பணியில் இருக்கிறார். பொதுவாக வெளிநாட்டில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் யாரேனும் இறந்தால் அவர்களது குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு கலெக்டரின் என்.ஆர்.ஐ. வங்கி கணக்கு மூலம் உதவித்தொகை வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் 6-வது மாடியில் வருவாய்த்துறை அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சென்னை கலெக்டர் அலுவலகத்தின் மூலம் என்.ஆர்.ஐ. வங்கி கணக்கில் இருந்து ரூ.11.5 லட்சம் வேறொரு வங்கி கணக்கிற்கு மோசடியாக சென்றிருப்பது ஆய்வில் தெரியவந்தது. 3 காசோலைகளில் கலெக்டரின் கைெயழுத்தை போலியாக போட்டும், கலெக்டர் அலுவலக ரப்பர் ஸ்டாம்ப்பை பயன்படுத்தி இந்த மோசடி நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த துணை கலெக்டர் ஹர்ஷத் பேகம், வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சென்னை வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வருவாய் துறை அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர்களாக பணிபுரியும் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரை அடுத்த பாக்கம் புதிய காலனி சேர்ந்த பிரமோத் (வயது 30), திருப்பூர் மாவட்டம் கோட்டை மாலனூரைச் சேர்ந்த சுப்பிரமணி (31) ஆகியோர் தங்களது நண்பரான திருவள்ளூர் மாவட்டம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த டிரைவரான தினேஷ் (30) என்பவருடன் சேர்ந்து இந்த பணத்தை திருடியதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
வருவாய் அலுவலர்களான பிரமோத், சுப்பிரமணி இருவரும் சேர்ந்து காசோலைகளில் சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவின் கையெழுத்தை போலியாக போட்டு, போலி ரப்பர் ஸ்டாம்ப் பயன்படுத்தி தயார் செய்துள்ளதாகவும், பின்னர் அந்த காசோலைகளை டிரைவர் தினேஷ் என்பவரிடம் கொடுத்து அவரது வங்கி கணக்கில் செலுத்தியதாகவும், இவ்வாறு 3 காசோலைகளை கொடுத்து ரூ.11 லட்சத்து 63 ஆயிரத்து 539 பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது.
கைதான 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவின் கையெழுத்தை போலியாக போட்டு வங்கி கணக்கில் வருவாய்த்துறை அதிகாரிகளே பணத்தை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications