ஜெகன்மோகன் ரெட்டி, ஜப்பானிய ராஜகுடும்பம் வருகை: ஸ்தம்பித்த சென்னை போக்குவரத்து
சென்னை: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் ஜப்பானிய ராஜகுடும்பத்தினரின் வருகையால் நேற்று சென்னை சாலைகள் ஸ்தம்பித்தன.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தெலுங்கானாவை தனி மாநிலமாக்க ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். அவரது வருகையையொட்டி அண்ணா சாலையில் காலை 11 மணிக்கு முன்பே போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது. அவர் விமான நிலையத்தில் வந்திறங்கி 40 வாகனங்கள் புடைசூழ போயஸ் கார்டன் சென்றார். மேலும் அவரது உறவினர் ஒருவரின் வீட்டுக்கும் சென்றார்.
ஜெகனை காண அவரது ஆதரவாளர்கள் வழிநெடுகிலும் திரண்டுவிட்டனர். அவரது வருகையையொட்டி சென்னை விமான நிலையம் முதல் போயஸ் கார்டன் வரை நூற்றுக்கணக்கான கட் அவுட்டுகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. மெரினா கடற்கரையில் ரெட்டியை புகழந்து வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து பைக்கில் சென்ற ஒருவர் காயம் அடைந்தார். இதையடுத்து சில பேனர்கள் அகற்றப்பட்டன.
ரெட்டியின் வருகையால் சேமியர்ஸ் ரோடு முதல் ஆர்.ஏ. புரம் வரை போக்குவரத்து 2 மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் தி. நகர், கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜெயலலிதாவை சந்தித்த பிறகு ரெட்டி கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். இந்நிலையில் ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ மற்றும் ராணி மிசிகா ஆகியோர் நேற்று மதியம் சென்னை வந்தனர். இவர்களின் வருகையாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.