அல்வா கொடுக்கிறார்.. புதுசு புதுசா பூ சுத்துறார் எடப்பாடி.. பாய்ச்சல் காட்டும் ஆர்.எஸ்.பாரதி
சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கு அல்வா கொடுக்க புதுசு புதுசா பூ சுத்துறார் எடப்பாடி பழனிச்சாமி என்று திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துங்க பாஸு, ப்ளீஸ்!: என்று கெஞ்சிக் கூத்தாடி, கண்ணீர் வரை விட்டுப்பார்த்துவிட்டன எதிர்க்கட்சிகள். ஆனால் அசைந்து கொடுக்கலை அ.தி.மு.க. விளைவு, நீதிமன்றம் போய் அவர்கள் மூலமாக ஆளுங்கட்சியின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த விஷயத்தில் நீதிமன்றம் கோபம் காட்டும்போதெல்லாம் 'இந்தா நடத்துறோம் நீதியரசரே!' என்று களமிறங்கும் ஆளுங்கட்சி அடுத்து அப்படியே அதை நைஸாக கிடப்பில் போட்டுவிட்டு போய்விடுவதாக தகவல். உள்ளாட்சி தேர்தலை நடத்திட அ.தி.மு.க. தயங்கிட ஒரே காரணம் 'தோல்வி பயம்'தான்! என போட்டுத் தாக்குகிறது தி.மு.க.
இந்த நிலையில், இப்படி உள்ளாட்சி தேர்தலை தள்ளிப் போட்டுக் கொண்டே போக அ.தி.மு.க. கண்டுபிடிக்கும் பல வித டெக்னிக்குகளில் ஒன்றுதான் 'தமிழகத்தில் புதிது புதிதாக மாவட்டங்களையும், மாநகராட்சிகளையும் உருவாக்கும் செயல்' என்றும் சாடியிருக்கின்றனர். தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களைத் தொடர்ந்து வேலூரை மூன்றாக பிரித்து புதிய மாவட்டங்களை அரசு உருவாக்கியிருக்கிறது.
அதேவேளையில் பொள்ளாச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களும் விரைவில் உதயமாகலாம் என்றும் தகவல் தடதடக்க துவங்கியுள்ளது. இதைத்தான் தி.மு.க. 'தேர்தலை தள்ளிப் போடும் டெக்னிக். எதையாவது சொல்லி காதுல பூ சுத்தி, தேர்தலை தள்ளிப்போடுகிறார் எடப்பாடியார்.' என்று கடுப்பாய் வர்ணிக்கிறது.
இதுபற்றி பேசியிருக்கும் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி "பொதுமக்களின் கருத்துக்களையும், அனைத்துக் கட்சியினரையும் கருத்துக்களையும் கேட்டுத்தான் புதிய மாவட்டங்களையும், மாநகராட்சிகளையும் அரசு உருவாக்கிட வேண்டும். ஆனால் ஆளும் அ.தி.மு.க.வோ அப்படி செய்யாமல், தன்னிச்சையாக அறிவிப்புகளை வெளியிடுகிறது. இது பல நிர்வாக சிக்கல்களை உருவாக்கும். அதுமட்டுமில்லாமல், இப்படியான புதிய மாவட்ட முடிவுகளை காரணம் காட்டி உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க நினைக்கிறார்கள். வார்டு வரையறை, மக்கள் தொகை கணக்கீடு என்றெல்லாம் ஏதாவது சொல்லி இழுக்கலாம் என்பது நினைப்பு.
ஆனால் இந்த முறை நீதிமன்றம் அப்படியெல்லாம் இழுக்க அனுமதிக்காது! என நம்புகிறோம்" என்கிறார்.
- ஜி.தாமிரா