ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் தேசியக் கொடி.. திருமாவளவன் பாடம் எடுக்க வேண்டாம்.. எல்.முருகன் காட்டம்!
சென்னை: ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு திருமாவளவன் போன்றோர் தேசியக் கொடியைப் பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கடந்த 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை மக்கள் அனைவரும் தங்கள் சமூக ஊடக கணக்கின் முகப்பு புகைப்படத்தை தேசியக்கொடியை வைக்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி அவரும், பாஜக தலைவர்களும் தங்கள் சமூக ஊடக கணக்கு பக்கங்களின் முகப்பு படங்களை மாற்றி வருகின்றனர்.
அதேபோல் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கேற்ப பாஜகவினர் தொடர் பரப்புரையை முன்னெடுத்து வருகின்றனர்.

திருமாவளவன் விமர்சனம்
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறுகையில், வீட்டுக்கு வீடு தேசியக் கொடியேற்றக் கூறும் பிரதமர் நரேந்திர மோடி, நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் ஏற்றுவாரா என்று கேள்வி எழுப்பினார். அதுமட்டுமல்லாமல், இதுவரை தேசியக் கொடியை ஏற்காத ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ் தான். தேசியக் கொடியிலுள்ள தர்ம சக்கரமான அசோக சக்கரம் கூடாது என்பதும், காவியைத் தேசியக் கொடியாக்க வேண்டும் என்பதுமே அவர் நோக்கம் என்று விமர்சித்தார்.

பாஜக கூட்டம்
இந்த நிலையில் சென்னையில் பாஜக சார்பாக பிறமொழி பிரிவுக் குழுவினரின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக வடமாநிலங்கள் இருந்து சென்னையில் குடிபெயர்ந்துள்ள பாஜக நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து எல்.முருகன் கூறுகையில், சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக அரசு
அதேபோல் தமிழக பாஜக சார்பாக பாத யாத்திரை, வாகன பேரணி உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை சார்பாக நாட்டின் விடுதலைக்காக போராடிய 75 தலைவர்கள் குறித்த வரலாற்று ஆவணப்படம் வெளியாக உள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழக அரசு காவல்துறையை கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறித்து வருகிறது என்று விமர்சித்தார். ஆனால் சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவை சுதந்திரமாக செயல்படக் கூடிய நிறுவனங்கள். அவர்களின் கடமையை செய்து வருகிறார் என்று தெரிவித்தார்.
Recommended Video

ஆர்எஸ்எஸ்
மேலும், ஆர்எஸ்எஸ் அலுவலகங்களில் சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வருகிறார்கள். ஆர்எஸ்எஸ் அலுவலகங்களில் தேசியக் கொடி வழங்கப்பட்டு வருகிறது. அதனால் திருமாவளவன் போன்றவர்கள், தேசியக் கொடி பற்றி ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications