வன்முறையை தூண்டவே ஆர்எஸ்எஸ் பேரணி..தொல்.திருமாவளவன் பகீர்..மனித சங்கிலிக்கு அழைப்பு
சென்னை:காந்தி பிறந்தநாளில் ஆர்எஸ்எஸ் நடத்தும் ஊர்வலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது மட்டுமின்றி தெரிந்தே வன்முறையை வெறுப்பு அரசியலை தூண்டுவதற்கு முயற்சி செய்கிறது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரும் அக்டோபர் 2ஆம் தேதியன்று சிபிஐ, சிபிஎம் ஆதரவுடன் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடத்த முடிவு செய்திருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய சுதந்திர தின 75ம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு பல்வேறு தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்ப பெறக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மனு தாக்கல் செய்துள்ளார்.

திருமாவளவன் குற்றச்சாட்டு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தொல். திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், காந்தியை படுகொலை செய்தவர்கள் ஆர்எஸ்எஸ் என்பது நாடறிந்த உண்மை. நாதுராம் கோட்சேவின் அண்ணன் கோபால் கோட்சே கைது செய்யப்பட்டது உலகம் அறிந்த உண்மை என்று கூறினார்.

காந்தி பிறந்தநாளில் பேரணி
அப்படிப்பட்ட படுகொலை குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பவர்கள் காந்தியின் பிறந்தநாளை ஏன் தேர்வு செய்ய வேண்டும். அதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. பாபர் மசூதியை இடிப்பதற்கு அம்பேத்கர் நினைவு நாளை தேர்வு செய்தார்கள். இன்றைக்கு பேரணி நடத்துவதற்கு காந்தி பிறந்தநாளை ஏன் தேர்வு செய்தனர்.

அரசியல் உள்நோக்கம்
ஊர்வலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது மட்டுமின்றி தெரிந்தே வன்முறையை வெறுப்பு அரசியலை தூண்டுவதற்கு ஆர்எஸ்எஸ் முயற்சி செய்கிறது. மதத்தின் பெயரால் வன்முறையை கட்டவிழ்த்து விட முயற்சி செய்கின்றனர். தமிழகம் சமூக நீதிக்கான சமூக நல்லிணக்கத்திற்கான மாநிலம். இங்கு ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது.

வன்முறையை தூண்ட திட்டம்
பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது வட இந்திய மாநிலங்களில் வன்முறை வெடித்தது. தமிழகம் அமைதிப்பூங்காவாக இருந்தது. அப்படிப்பட்ட தமிழகத்தில் திட்டமிட்டே வன்முறையை தூண்டுவதற்காக ஊர்வலம் நடத்துகின்றனர். இதற்கு அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளனர். காவல்துறைக்கு உயர்நீதிமன்றமும் வழிகாட்டுதல்களை அறிவுறுத்தியுள்ளது.

மனித சங்கிலி போராட்டம்
இந்த நிலையில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரும் அக்டோபர் 2ஆம் தேதியன்று சமூக நல்லிணக்க பேரணி நடத்துவதாக அறிவித்தோம். இடதுசாரி தோழமை கட்சிகளான சிபிஐ, சிபிஎம் ஆதரவுடன் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடத்த முடிவு செய்திருக்கிறோம். ஆங்காங்கே அமைதியான முறையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடத்தப்படும். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் அனைவரும் பங்கேற்கலாம் என்றும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications