”காமராஜரை கொல்ல முயற்சித்தது.. காந்தியை கொன்றது” ஆர்எஸ்எஸ் மீது பாய்ந்த திருமாவளவன்!
சென்னை: முன்னாள் முதலமைச்சர் காமராஜர் தூங்கிக் கொண்டிருந்த போது கொலை செய்ய முயற்சி செய்தது ஆர்எஸ்எஸ் என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் கூறுகையில், புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கு முழுமையாக ஒப்படைத்துகொண்டவர் பெருந்தலைவர் காமராசர். அவரது நினைவு நாளில் சனாதன அரசியலை ஒரு போதும் தமிழ் மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என்று விசிக உறுதி ஏற்கிறது.

ஆர்எஸ்எஸ் இயக்கம்
வடஇந்திய மாநிலங்களில் வெறுப்பு அரசியலை விதைத்து, அப்பாவி மக்களிடையே வன்முறைகளை கட்டவிழ்த்துவிடும் யுக்திகளை ஆர்எஸ்எஸ் கடைபிடித்து வருகிறது. இதுவரை ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த 18 பேர் மீது குண்டுவெடிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளது. அண்மையில் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு அமர்வு நீதிமன்றத்தில் யஷ்வந்த் ஷிண்டே என்பவர் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.

வெறுப்பை விதைக்கும் ஆர்எஸ்எஸ்
அதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருப்பவர்களுக்கு எப்படி வெறுப்பு அரசியலை கற்றுக் கொடுக்கிறார்கள், எப்படி குண்டுவீச கற்றுக்கொடுக்கிறார்கள் என்பது எல்லாம் ஆதாரங்களோடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பயங்கரவாத அரசியலை கொண்ட இயக்கம் தான், கலாச்சார போர்வையில் இயங்குகிறது. வன்முறை எண்ணத்தையும், வெறுப்பையும் திட்டமிட்டு விதைக்கிறார்கள்.

தமிழ்நாடு தான் குறி
இந்த அரசியலில் இருந்து தமிழ்நாடு பாதுகாப்பாக இருந்தது. தற்போது தமிழ்நாட்டை ஆர்எஸ்எஸ் இயக்கம் குறிவைத்துள்ளது. அவர்களின் நோக்கத்தை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் தான் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக சமூக நல்லிணக்க மனித சங்கிலியை அறிவித்தோம். அது வரும் அக்.11ம் தேதி திட்டமிட்டபடி நடக்கும் என்று தெரிவித்தார்.

காந்தியை கொன்ற கும்பல்
தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவே ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று நினைத்தவர். அதேபோல் பாஜக கொண்டாடும் சர்தார் வல்லபாய் படேல், ஆர்எஸ்எஸ் இயக்கம் வளர்வது நாட்டுக்கு ஆபத்து. இதனால் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும். இப்படிப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை வளர கூடாது என்று தடை விதித்தார். ஏன், காமராசர் தூங்கிக் கொண்டிருந்த போது அவரை கொலை செய்ய முயற்சித்தவர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர். காந்தியடிகளை சுட்டுக்கொன்ற கும்பல் ஆர்எஸ்எஸ். இவர்கள் தமிழ்நாட்டில் வாலை சுருட்டிக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.












Click it and Unblock the Notifications