சாட்டையை சுழற்றும் சென்னை மாநகராட்சி.. வீட்டு தனிமையில் உள்ளவர்கள் வெளியே வந்தால் ரூ.2000 அபராதம்
சென்னை: கொரோனா வைரஸ் தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியே வருவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டு, கொரோனா பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்படி பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது.
இவற்றின் ஒரு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கொரோனோ வைரல் தொற்று தடுப்பு நடவடிக்கை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மண்டலத்திற்கு இரண்டு எண்ணிக்கையில் மண்டல அமலாக்கக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது நாள்தோறும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறுபவர்களிடமிருந்து அபராதத் தொகையினையும், கடைகளை மூடி சீல் வைத்து, அபராத தொகையினையும் வசூலித்து வருகின்றனர்.
உணவுப் பொருள்
மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனையின்படி தொற்று பாதிப்பு குறைவாக உள்ள நபர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் போன்ற அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய பெருநகர சென்னை மாநகராட்சியால் 2000க்கும் மேற்பட்ட முன்கள் தன்னார்வலர்கள் (Focus Volunteers) பணியமர்த்தப்பட்டுள்ளனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீடுகளையிட்டு வெளிலே வராமல் இருப்பதற்றாக இத்தகைய ஏற்பாடுகளள பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
வீடுகளை விட்டு வெளியே சுற்றும் நோயாளிகள்
பெருநகர சென்னை மநகராட்சி பொதுமக்களின் நலன் கருதி அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வகும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களில் ஒரு சிலர் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீடுகளைவிட்டு வெளியே வருவதாக புகார்கள் பெறப்பட்டு வருகிறது. இத்தகைய செயலினால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு கொரோனா வைஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் மருந்துவரால் அறியுறுத்தப்பட்ட நாட்கள் வரை விடுகளை விட்டு வெளியில் வராமல் இருக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறது.
அபராதம்
இதனை மீறி வீடுகளை விட்டு வெளியில் வருபவர்களிடமிருந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல அமலாக்க பிரிவின் மூலம் முதல் தடவையாக ரூ.2000/- அபராதமாக வசூலிக்கவும், இரண்டாவது தடவை மீண்டும் வீடுகளை விட்டு வெளியில் வருவது கண்டறியப்பட்டால் அவர்களை பெருநகர சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் கொரோனா பாதுகாப்பு மையங்களில் (COVID CARE CENTRE) தங்க வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நம்பருக்கு போனை போடுங்க
வீடுகளை விட்டு வெளியே வரும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் குறித்த விவரங்களை அருகாமையில் வசிப்பவர்கள் மற்றும் ஏனையோர் 044-25384520 என்ற தொலைபேசி எண்ணில் புகாராக அளிக்கலாம். எனவே கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்கும்படி முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி கேட்டுக் கொண்டுள்ளார்.