Sakthi Thirumagan: ஜென்டில்மேனுக்கு பதிலடியா விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன்? காரசார விவாதம்
சென்னை: "ஜென்டில்மேனுக்கு" போட்டியாக "சக்தி திருமகன்" எனும் படம் எடுக்கப்பட்டதாக சமூகவலைதளத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது. விஜய் ஆண்டனி நடிப்பில் "சக்தி திருமகன்" எனும் திரைப்படம் திரையரங்கில் வெளியான காலகட்டத்தை விட ஹாட்ஸ்டார் ஓடிடியில், வெளியாகிய பிறகு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் இடம் பெற்ற கருத்துகள் குறித்து சமூகவலைதளத்தில் விவாதமே நடக்கிறது. ஹீரோ விஜய் ஆண்டனியின் தாய் பழங்குடியினத்தை சேர்ந்த பெண். அவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு விடுவதால் வாகை சந்திரசேகரிடம் விஜய் ஆண்டனி வளர்கிறார்.
வாகை சந்திரசேகர் பெரியாரிய கொள்கைவாதி. சிறுவயது முதலேயே விஜய் ஆண்டனிக்கு பகுத்தறிவு, சமூகநீதி, சமத்துவம், மதநல்லிணக்கம் உள்ளிட்ட பெரியாரிய கொள்கைகளை வாகை சந்திரசேகர் கற்றுக் கொடுத்து வளர்கிறார்.

விஜய் ஆண்டனி பெரியவரானதும், வாகை சந்திரசேகர் அறிவுரை தாக்கத்தால், கெட்டவர்களிடமிருந்து பணத்தை கொள்ளையடித்து இல்லாதவர்களுக்கு கொடுப்பார். ஷங்கர் எடுத்த ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன், கொள்ளைகளை செய்து, ஏழைகளுக்கு உதவி செய்வது போல் காட்டப்பட்டிருக்கும்.
உயர் ஜாதியாக கருதப்படும் நம்பியார் கதாப்பாத்திரம் சொல்ல சொல்ல அர்ஜுன் இதைச் செய்வார். உயர் ஜாதியினருக்கான நல்ல ஹீரோ கதாப்பாத்திரம் பெரியார் பற்றாளருக்கு கொண்டு வரப்படுவதற்கு 32 வருஷமாகியுள்ளது என்கிறார்கள் நெட்டிசன்கள்.
இதுகுறித்து டீக்கடை பெயரிலான சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: "ஜென்டில்மேனில் அர்ஜூன் பிராமணர் அல்ல. ஆனால் பிராமணரால் தூண்டப்படுபவர்.அதுவும் இன்னும் கூட சமூகத்தில் முன்னேற முடியாமல் இருக்கும் மக்களுக்கு ஆதரவான இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரான படம். படத்தில் பிராமணர் ஒருவருக்கு மெடிக்கல் சீட் கிடைக்காது. அவரைவிட குறைந்த மதிப்பெண் எடுத்த ஒரு பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட ஒருவருக்கு மெடிக்கல் சீட் கிடைத்துவிடும்.
2000 வருடங்களாக படிக்க வாய்ப்பு கிடைத்த தலைமுறை எங்கே? இன்னும் கூட முதல் பட்டதாரி ஆகாத எத்தனையோ தலைமுறைகள் இங்கே பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருக்கின்றனர். அதுவும் இந்த படம் 1993இல் வந்தது. அந்த சமயத்தில் தான் இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மருத்துவம் பொறியியல் கல்லூரிகள் பக்கம் தலை வைத்த காலம். அது கூட பொறுக்கவில்லை.
ஜென்டில்மேன் படத்தின் தவறான ஐடியாலஜியில் இருந்து சக்தி திருமகன் என்னும் சரியான ஐடியாலஜிக்கு வர தமிழ் சினிமாவிற்கு 32 வருடங்கள் ஆகியிருக்கிறது". இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது ஒருபக்கம் எனில், ஜென்டில்மேன் படத்தின்மீது தொடர்ந்து இப்படி அவதூறு பரப்பப்படுவதாக வேறு சிலர் பதிவு வெளியிடுகிறார்கள். எந்த ஜாதியாக இருந்தாலும், கல்லூரி சீட்டுக்கு லஞ்சம் கேட்கும் அரசியல்வாதிகளால் ஏற்படும் பாதிப்பைதான் படத்தில் பதிவு செய்திருப்பர் என்பது அவர்கள் வாதம். மேலும், சக்திதிருமகன் திரைக்கதை குழப்பமாகவும், மக்களோடு தொடர்பில்லாமலும், அதிக வசனங்களாலும் மூழ்கியுள்ளதால், படம் ஓடவில்லை. ஓடிடியில் பார்க்க வைக்க ஜென்டில்மேன் போன்ற கல்ட் க்ளாசிக் படத்தோடு ஒப்பீடு செய்யப்படுகிறது என்பது எதிர்தரப்பு வாதம்.












Click it and Unblock the Notifications