திமுக 'பெரியார் விருது' சம்பூர்ணம் பி.ஏ.சாமிநாதன்- மிசாவில் திமுகவினருக்கு அரணாக நின்ற அம்மையார்!
சென்னை: திமுகவின் முப்பெரும் விழாவில் பெரியார் விருது, சம்பூர்ணம் சுவாமிநாதன் அம்மையாருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தொண்டர்களுக்கு காலந்தோறும் அரணாக நின்றவரான சம்பூர்ணம் பி.ஏ.சாமிநாதனுக்கு பெரியார் விருது கிடைத்துள்ளது என மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர் மேற்கு மண்டல திமுகவினர்.
திமுகவின் முப்பெரும் விழா விருதுநகரில் செப்டம்பர் 15-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில், பெரியார் விருது - சம்பூர்ணம் சாமிநாதனுக்கும், அண்ணா விருது - கோவை இரா. மோகனுக்கும், கலைஞர் விருது - திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பிக்கும், பாவேந்தர் விருது - புதுச்சேரி சி.பி. திருநாவுக்கரசுக்கும், பேராசிரியர் விருது - குன்னூர் சீனிவாசன் ஆகியோருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார் விருதுக்கு திமுகவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான பி.ஏ.சாமிநாதனின் மனைவி சம்பூர்ணம் அம்மையார் தேர்வு செய்யப்பட்டுள்ளதை திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிண்றனர். சம்பூர்ணம் சாமிநாதன் குறித்து திமுகவின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் பொள்ளாச்சி மா. உமாபதி தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
செந்தில் பாலாஜியை விடாமல் விரட்டும் பண மோசடி வழக்கு.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எப்போது?
கோவை தளபதி பிஏ சாமிநாதன்
1971-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த கோவை மாவட்டம், இன்றைய கோவை, திருப்பூர் , ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கியது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கோவை மாவட்டத்தில் கழகம் வளர்த்த மாவட்டச் செயலாளர் மாவீரன் உடுமலை ப. நாராயணன். 1962இல் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவர் மேனாள் ஒன்றிய அமைச்சராக விளங்கிய பாரத ரத்னா சி சுப்பிரமணியம் அவர்கள் ஆவார்.
சி.சுப்பிரமணியத்தை வீழ்த்தியவர்
1967இல் பொள்ளாச்சி தொகுதியில் அவரை வென்று காட்டுவேன் என்று உடுமலை நாராயணன் அவர்கள் கூவல் விடுத்த போது, என்னைத் தோற்கடிக்க உடுமலை நாராயணன் அல்ல "வைகுண்ட நாராயணனே" வந்தாலும் முடியாது என்று சி சுப்பிரமணியம் கூறினார். ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க பொள்ளாச்சி தொகுதியில் வெற்றி பெறுவது கடினம் என்று எண்ணிய அமைச்சர் சி சுப்பிரமணியம் கோபி தொகுதியில் சென்று போட்டியிட்டார். அங்கு அவரை எதிர்த்து கழக வேட்பாளராக போட்டியிட்டவர் புஞ்சை புளியம்பட்டி பி ஏ சாமிநாதன். தொகுதி மாறிச் சென்றும் சி சுப்பிரமணியம் பி ஏ சாமிநாதன் அவர்களிடம் தோல்வியை தழுவினார்.
மிசா காலத்தில் அரணாக இருந்தவர்
1971 இல் உடுமலை நாராயணன் காலமான பின் பி.ஏ.சாமிநாதன் கோவை மாவட்ட செயலாளர் ஆனார். அவர் மாவட்டச் செயலாளராக இருந்த போது தான் 1975 ஆம் ஆண்டு இறுதியில் திமுக கழகத்தின் ஐந்தாம் மாநில மாநாட்டை கோவையில் மிக எழுச்சியுடன் நடத்திக் காட்டினார் . அதற்குப் பரிசாக மிசா நெருக்கடி காலத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். சாமிநாதன் அவர்கள் சிறையில் இருந்த போது அவரோடு கைதாகி சிறையில் இருந்த கழகத் தொண்டர்கள் குடும்பங்களுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களின் குடும்பத் தேவைகளை நிறைவு செய்தவர் சாமிநாதன் அவர்களின் துணைவியார் சம்பூர்ணம் சாமிநாதன் ஆவார்.
சம்பூர்ணம் பிஏ சாமிநாதனுக்கு பெரியார் விருது
தன் கணவர் சிறை பட்டு சிறையில் துன்புறுவது கண்டு கவலைப்படாமல் கழகத் தோழர்களின் துன்பம் துடைக்கவும், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் அம்மையார் சம்பூர்ணம் சாமிநாதன் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி பெரும் பாராட்டுக்கு உரியது. மாவட்டச் செயலாளரை தேடி இல்லம் வருவோருக்கெல்லாம் பாசத்துடன் உணவளித்து அன்பு காட்டிய அன்னபூரணி அவர். அவருக்கு இந்த ஆண்டு முப்பெரும் விழாவில் பெரியார் விருது கொடுத்திருப்பது பெரும் மகிழ்ச்சிக்கு உரியதும், பாராட்டுக்கு உரியதும் ஆகும். கழக தலைமைக்கு தலைவர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்கி மகிழ்கிறோம். இவ்வாறு பொள்ளாச்சி மா.உமாபதி தெரிவித்துள்ளார்.