அதிமுக பொன்விழாவில் ஜானகியை மறக்காத சசிகலா... எம்.ஜி.ஆர். உறவினர்களிடம் நலம் விசாரிப்பு..!
சென்னை: அதிமுக பொன்விழா ஆண்டு துவக்க நாளையொட்டி சென்னை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் தோட்டத்துக்கு சென்ற சசிகலா, அங்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சசிகலாவை சிறுமி ஒருவர் பூங்கொத்து கொடுத்து ராமாவரம் தோட்டத்துக்கு வரவேற்ற நிலையில், எம்.ஜி.ஆரின் உறவினர்களிடம் அவர் நலம் விசாரித்தார்.
இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்
மக்கள் பணி புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி என்ற பெயரில் புத்தகம் ஒன்றையும் சசிகலா வெளியிட்டார்.
ராமாவரம் தோட்டம்
அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் இன்று தொடங்கியுள்ள நிலையில், சென்னை ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு சென்ற சசிகலா அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். முன்னதாக தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு சென்ற அவர், அங்கிருந்து ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக பயணித்து ராமாவரம் தோட்டத்தை சென்றடைந்தார்.
ஜானகி அம்மா
இன்று ஞயிற்றுக்கிழமை என்பதால் சாலைகளில் டிராஃபிக் கூட அதிகம் இல்லை. அரை மணி நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு தொண்டர்கள் ஆங்காங்கு கொடுத்த வரவேற்பு காரணமாக தாமதமாக செல்ல நேரிட்டது. சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்ட அமமுக முன்னணி நிர்வாகிகள் பலர் அதிமுக பொன்விழா ஆண்டு துவக்க நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராமாவரம் தோட்டத்துக்கு வந்திருந்தனர். முதலில் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்த அவர், அதற்கடுத்து எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவுக்கும் மரியாதை செலுத்தினார்.
நலம் விசாரிப்பு
ஜானகி புகைப்படத்திற்கு முன் நின்று வணங்கிய அவர், மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக பொன்விழா வரலாற்றில் ஜானகிக்கு முக்கிய இடம் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது. இந்த நிகழ்வுகளுக்கு பிறகு, எம்.ஜி.ஆர். உறவினர்களை சந்தித்து அவர்களிடம் நல விசாரித்துவிட்டு, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்.
ஆனந்தன் பேச்சு
அந்தக் கூட்டத்தில் முக்கிய முகங்கள் யாரும் பங்கேற்கவில்லை. முன்னாள் அமைச்சர் ஆனந்தன் பேசும் போது, தனக்கு எம்.ஜி.ஆர். தான் திருமணம் செய்து வைத்தார் என்றும் எம்.ஜி.ஆர் காலத்திலேயே தாம் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் எனவும் தெரிவித்தார். எம்.ஜி.ஆரை நேரில் பார்க்காதவர்கள் எல்லாம் இன்று கட்சிக்கு சொந்தம் கொண்டாடுவதாக ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்.சை சாடினார். மேலும், எம்.ஜி.ஆர். கோயிலான ராமாவரம் தோட்டத்தில் நடக்கும் நிகழ்வு தான் உண்மையான பொன்விழா துவக்க நாள் விழா எனக் குறிப்பிட்டார்.
மேலாளர் மகாலிங்கம்
அவரைட் தொடர்ந்து பேசிய சசிகலாவின் ஆதரவாளரும், பேச்சாளருமான ஒருவர் சசிகலாவுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அதிமுக தலைமைக்கழகத்தில் பணியாற்றி வரும் மேலாளர் மகாலிங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என்றும் யார் பெட்டிஷன் போட்டாலும் பெட்டிஷன் போடப்பட்டவர்களை அழைத்து பணத்தை கறந்து சொத்து சேர்த்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஜெயக்குமாரின் பேட்டிகளை பார்க்கும் போது தனக்கு ரத்தம் கொதிப்பதாக பேசினார். முக பாவனைகளில் எந்த மாற்றத்தையும் வெளிக்காட்டாமல் சசிகலா பேச்சை கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.