உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு.. திமுகவின் மனு மீது டிசம்பர் 5ம் தேதி அவசர விசாரணை!
உள்ளாட்சி தேர்தலுக்கு எதிரான திமுகவின் வழக்கு மீது டிசம்பர் 5ம் தேதி உச்ச நீதிமன்றம் அவசர விசாரணை நடத்த உள்ளது.
Recommended Video
சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கு எதிரான திமுகவின் வழக்கு மீது டிசம்பர் 5ம் தேதி உச்ச நீதிமன்றம் அவசர விசாரணை நடத்த உள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஜுரம் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 2020ல் நடக்கும்.
ஆனால் மாநகராட்சி, நகராட்சி தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படவில்லை. நிர்வாக காரணங்களுக்காக இந்த தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்னொரு பக்கம் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க கோரி திமுக சார்பில் வழக்கு தொடுத்துள்ளது.தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல் தேர்தல் நடத்த கூடாது. இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் தேர்தல் நடத்த கூடாது என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது. கடந்த நவம்பர் 28ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் திமுகவின் வழக்கு மீது டிசம்பர் 5ம் தேதி விசாரணை செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் திமுகவின் மனுவை அவசர வழக்காக விசாரிக்கிறது. இந்த மனுவில் தேர்தல் தேதிகள் குறித்தும், உள்ளாட்சிக்கு மட்டும் தேர்தல் அறிவித்துவிட்டு மாநகராட்சிக்கு தேர்தல் அறிவிக்காதது குறித்தும் திமுக கூடுதல் மனுக்களை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தொகுதி வரையறை தொடர்பாக தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வராத நிலையில் தேர்தலை நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக புதிதாக மனு தாக்கல் செய்துள்ளது.