தீயைவிட கோரமான ‘தீ’ண்டாமை.. திருந்தாத டீச்சர்கள்! மாணவர்கள் ஹேர் ஸ்டைல் இருக்கட்டும் - இத செய்யுங்க!
சென்னை: தூத்துக்குடியில் பள்ளி மாணவனிடம் சாதிவெறியை தூண்டும் வகையில் பேசிய ஆசிரியை, சென்னை பச்சையப்பன் கல்லூரி ஆசிரியையின் சாதிவெறி பேச்சை தொடர்ந்து பாஞ்சாங்குளம் பள்ளியில் ஆதிதிராவிட மாணவர்கள் சாதி பாகுபாட்டோடு நடத்தப்படுவதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் வெளியிடும் பாட புத்தகங்களை திறந்தால் அனைவர் கண்களிலும் முதலில் தெரிவது, "தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்" என்ற 3 வரிகள்தான். பல பத்தாண்டுகளாக பாடபுத்தகங்களில் தவறாமல் இடம்பெற்று வரும் இந்த 3 வரிகள் குறித்து பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் விளக்குவது கிடையாது.
வேண்டுமென்றே ஆசிரியர்கள் அதை கடந்து செல்வதையும் காணலாம். சில ஆசிரியர்கள் அதுகுறித்து விளக்க முற்பட்டாலும் பிரச்சனை ஏற்படுமோ என்று எண்ணி அமைதி காக்கின்றனர். 12 ஆம் வகுப்பு படிக்கும் சில பள்ளி மாணவர்களிடம் இந்த 3 வரிகளுக்கான விளக்கத்தை நாம் கேட்டபோது திருப்திகரமான பதில்கள் வரவில்லை. தந்தை பெரியார் பிறந்தநாளன்று சமூக நீதியை காப்போம் என்று உறுதிமொழியேற்க சொன்ன தமிழ்நாடு அரசு, இந்த 3 வரிகள் குறித்து முதலில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வகுப்பெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும்.
“மெட்ராஸ்” படம்போல் சுவர் சண்டை.. சாதிவெறி பேச்சு! பாமக எம்எல்ஏ மீது புகார் - கொந்தளித்த திருமாவளவன்
கல்வி எண்ணும் ஒளி
மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதற்கு முன்பாக ஆசிரியர்களுக்கே தீண்டாமை, சாதிய கொடுமைகள், ஏற்றத்தாழ்வு போன்றவை குறித்து அரசு புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்பதை அண்மைகால நிகழ்வுகள் உணர்த்துகின்றன. மாணவர்கள் படிக்காமல் பழமைவாதத்தில் மூழ்கி சாதி, மத பெருமைகளை பேசி முன்னேற்றாமல் சமூக விரோதிகளாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே காமராஜர், அண்ணா காலம் தொட்டு கல்வி எண்ணும் ஒளியை அவர்கள் மீது தமிழ்நாடு அரசு பாய்ச்சி வருகிறது.
ராஜஸ்தான் சம்பவம்
ஆனால், அந்த கல்வியிலும் சாதியை புகுத்தி அரசியல் ஆட்டங்களை சிலர் ஆடி வருகின்றனர். பள்ளிக்கு வரும் மாணவர்களை திருத்த வேண்டிய ஆசிரியர்களே அவர்களிடம் சாதி என்னும் விஷத்தை பிஞ்சு மனத்தில் ஆழமாக விதைக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பாக ராஜஸ்தானில் ஒரு தலித் மாணவர் அனைவரும் பயன்படுத்தும் குடிநீர் பானையை தொட்டதற்காக அவரை ஆசிரியர் அடித்தே கொன்ற சம்பவத்தை கேட்டு உள்ளமெல்லாம் நடுங்கியது. சமூக வலைதளங்களில் இந்த செய்திக்கு கீழே கருத்திட்ட தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இதெல்லாம் வட நாட்டில்தான் நடக்கும். தமிழ்நாட்டில் சாத்தியமில்லை என்று குறிப்பிட்டு பெருமை பேசியதை பார்க்க முடிந்தது.
பாஞ்சாங்குளம் சம்பவம்
அப்படியெல்லாம் கிடையாது என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறது பாஞ்சான்குளம் சம்பவம். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த பாஞ்சாங்குளத்தில் பட்டியலின மாணவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாகக் கூறி கடைக்காரர் தின்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம் இன்று தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடைக்காரரும், ஊரை விட்டு ஒதுக்கி வைத்த பஞ்சாயத்து தலைவரும் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.
பள்ளியில் சாதிக் கொடுமை
இந்த நிலையில் பாஞ்சாங்குளம் பள்ளியிலும் தாங்கள் சாதிக் கொடுமைகளுக்கு ஆளாகி இருப்பதாக மாணவர்கள் பகீர் தகவலை வெளியிட்டு உள்ளார்கள். தங்களை தெருவில் நடக்கவிடாதது மட்டுமின்றி பள்ளியிலும் தனியாக அமர வைப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். மற்ற சாதியை சேர்ந்தவர்கள் தங்களை மோசமாக நடத்துவதாகவும், தரையில் தங்களை அமர வைப்பதாகவும் கூறப்படுகிறது.
அண்ணாவின் பச்சையப்பன் கல்லூரி
இதேபோல் சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ் துறை பேராசிரியை அனுராதா மாணவர் ஒருவரிடம் செல்போனில்பேசிய ஆடியோ வெளியாகி பலரை அதிர வைத்தது. "கல்லூரிக்கு வரும் மாணவர்களின் முகத்தை பார்த்தாலே BCயா, MBCயா, SCயா என்று தெரிந்துவிடும். நீ என்ன சாதி என்று எனக்கு தெரியாது. நீ என்ன சாதி?" என்று மாணவரிடம் கேட்கிறார் அனுராதா. சாதிக்கு எதிராக சாகும் வரை போராடிய பேரறிஞர் அண்ணா படித்த, பேராசிரியராக பணிபுரிந்த பச்சையப்பன் கல்லூரியின் இன்றைய நிலை இது.
சென்னையில் சாதி
இன்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்றாலே ரவுடிகளை போல் காட்சிப்படுத்தப்படும் நிலையில், அவர்களின் இத்தகைய நிலைக்கு அனுராதா போன்ற சாதி வெறிப்பிடித்த பேராசிரியர்கள்தான் காரணமாக இருப்பார்களோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை. சென்னையில யாரு சார் சாதி பார்க்கிறார்கள் என்ற கேள்வியை பலரும் எதிர்கொண்டிருப்போம். இப்படி சப்பைகட்டு கட்டிக்கொண்டே சொந்த ஊர், தாத்தா பெயர் என்ன, குலதெய்வம் என்னவென கேட்டு சாதியை கண்டறியும் மக்கள் அதிகம்.
விளாத்திக்குளம் மாணவன்
கிராமங்களை ஒப்பிடுகையில் சென்னையில் சாதியின் தாக்கம் குறைவு என்றாலும் அது முழுவதுமாக ஒழியவில்லை என்பதையும், கல்வி நிறுவனங்களில் அது அதிகம் பரவுகிறது என்பதற்கும் பேராசிரியர் அனுராதா - மாணவனின் செல்போன் உரையாடல் ஒரு சான்று. இப்படிதான் இதற்கு சில மாதங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே அரசுப்பள்ளி மாணவனிடம் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி சாதி ரீதியாக செல்போனில் பேசும் ஆடியோ வெளியானது.
எல்லோரும் சமம்தானே டீச்சர்
பட்டியல் சமுதாய ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எதிராக மாணவனை தூண்டிவிடும் வகையில் பேசிய அந்த ஆசிரியையிடம் மாணவன் முனீஸ்வரன் "எல்லோரும் சமம்தானே டீச்சர்" என்று பதிலளித்து நெத்தியடி கொடுத்திருப்பார். கடைசியில் அந்த ஆடியோவை வெளியிட்டு ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கவும் மாணவன் உதவினார். மாணவர்களே இப்படி திருந்தி சமத்துவமாக பழகும் நிலைக்கு மாறிவிட்டாலும், பதவி, அதிகாரம், பணம், கௌரவத்துக்காக அவர்கள் மனதில் நஞ்சை விதிக்கிறார்கள் ஆசிரியர்களில் சிலர்.
தமிழ்நாட்டில் சாதி
பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி போன்றோரது செயல்பாடுகளாலும் உத்தரவுகளாலும் சாதி ஒடுக்குமுறை என்பது குறைவாகவே உள்ளது. ஆனால் முற்றிலுமாக அழியவில்லை. சொல்லப்போனால் தமிழ்நாட்டில் அது மீண்டும் வளர்ந்து வருகிறதோ என்ற அச்சம் எழுகிறது. பள்ளி, கல்லூரிகளில் சாதிக்கொரு நிறத்தில் கயிறு கட்டுவது, மோதலில் ஈடுபடுவது போன்ற காரியங்களில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர்.
அரசின் கடமை
இதற்கு பின்னணியில் சாதி, அரசியல் சக்திகள் மட்டுமின்றி ஆசிரியர்களும் இருப்பதை அறிய முடிகிறது. எனவே குழாயில் வரும் நீர் தூய்மையில்லை என்று புலம்பாமல், தொட்டியை சுத்தம் செய்ய அரசு முயல வேண்டும். தொட்டி என்று நாம் இங்கு குறிப்பிடுவது ஆசிரியர்களை தான். சாதிவெறி கொண்ட ஆசிரியர்கள் வைத்துக்கொண்டு மாணவர்களை சமத்துவ வாதிகளாக எதிர்பார்ப்பது ஆடுக்கு பூனைக்குட்டி பிறக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை போன்றதாகும்.
எதிர்கால தலைமுறை
திராவிட மாடல் என மூச்சுக்கு முன்னூறு முறை பேசும் தமிழ்நாடு அரசு, மாணவர்களின் தலைமுடி ஸ்டைலில் மட்டும் கவனம் செலுத்தாமல் அவர்களுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் சமத்துவவாதிகளாக என்பதை அறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமத்துவம் விரும்பும் பெற்றோர், ஆசிரியர்களின் விருப்பம். இதன் மூலம் எதிர்காலத்தில் சாதி, மதவெறி கொண்ட தமிழ் சமுதாயம் உருவாகாமல் தவிர்க்கலாம்.