மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இட ஒதுக்கீடு கட்டாயம்! சாதகம், பாதகம் என்ன? கல்வியாளர் சொல்வது இதுதான்!
சென்னை: மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது இட ஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை போல் மெட்ரிக் பள்ளிகளிலும் கட்டாயம் இடஒதுக்கீடு.. தமிழக அரசு
இந்த இட ஒதுக்கீட்டின் சாதகம் பாதகம் பற்றியும் இதன் தேவை அவசியம் தானா என்பது குறித்தும் கல்வியாளர் நெடுஞ்செழியன் ஒன் இந்தியா தமிழிடம் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
அதன் விவரம் வருமாறு;
இட ஒதுக்கீடு
''மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்ற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவு, மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். இது சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எந்த விதத்திலும் பொருந்தாது. என்னைக் கேட்டால் இந்த இட ஒதுக்கீடு முறையே தேவையற்ற ஒன்று. அனைவருக்கும் கல்வி என்பது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டுமே தவிர இப்படி இட ஒதுக்கீடின் அடிப்படையில் மாணவர்களை பிரிக்கக் கூடாது.''
உதாரணம்
''இப்ப உங்களுக்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன், சென்னை போன்ற பெருநகரங்களில் பழங்குடியின மாணவர்கள் இருப்பது அபூர்வமானது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1% இட ஒதுக்கீட்டில் மற்ற சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களை அட்மிஷன் போடக்கூடாது என்றால் அந்த இடம் காலியாக தான் இருக்கும். இன்னும் உங்களுக்கு விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு இடத்தில் ஒரு குறிப்பிட்ட கம்யூனிட்டியை சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பார்கள். இன்னொரு இடத்தில் அந்த கம்யூனிட்டியை சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவமே இருக்காது.''
சீட் வேஸ்ட்
''மயிலாபூர், திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் ஃபார்வார்டு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் அந்த இடத்தில் கொண்டு போய் பழங்குகுடியினர் உள்ளிட்ட இதர சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கினால் சீட் வேஸ்டாக போகும் நிலை தான் வரும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களை இப்படி பிரிக்கக் கூடாது என்பதே எனது நிலைப்பாடு. தரமான பள்ளிகளை தமிழகத்தில் இன்னும் அதிகரிக்க வேண்டும்.''
கல்வியாளர் நெடுஞ்செழியன்
''இதன் மூலம் மட்டுமே அனைவருக்கும் கல்வி என்பது சாத்தியமாகும்'' என கல்வியாளர் நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார். இதனிடையே பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் சேர்க்கையில், பொதுப்பிரிவுக்கு 31%, எஸ்.டி.பிரிவுக்கு 1%, எஸ்.சி.பிரிவுக்கு 18%, எம்.பி.சி. பிரிவுக்கு 20%, பி.சி. பிரிவுக்கு 26.5%, பி.சி.எம்.க்கு 3.5%, இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.