நவ.1ல் பள்ளிகள் திறப்பு... 10,12 பொதுத் தேர்வு எப்போது - அன்பில் மகேஷ் ஆலோசனை
நவம்பர் 1ஆம் தேதி 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது பற்றியும், 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது பற்றியும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வ
சென்னை: கொரோனா பரவல் அச்சம் இருந்தாலும் பள்ளிகள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது பற்றியும், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள் ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்தது. தற்போது தொற்று குறையத் தொடங்கியதையடுத்து கல்வி நிலையங்கள் படிப்படியாக செயல்பட தொடங்கியுள்ளன.
கடந்த 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
இதனிடையே கற்றல் இடைவெளியைப் போக்க எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணாக்கர்களுக்கு, பாடம் ஆசிரியர்கள்வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் வகையில் இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த திட்டத்தை முதற்கட்டமாக சென்னையில் அமல்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, ஒவ்வொரு ஆசிரியரும், தங்களது பள்ளியில் படிக்கும் மாணாக்கர்களின் பகுதிக்கு சென்று, அங்குள்ள மாணாக்கர்களை ஒருங்கிணைத்து, தினசரி 2 மணி நேரம் பாடங்கள் நடத்தவும், கற்றல் குறைபாட்டை போக்க பல்வேறு செயல்முறை நிகழ்ச்சிகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட உள்ளனர்.
ஆசிரியர்கள் பணி செய்வதை தொடக்கக் கல்வி அலுவலர்கள் கண்காணிப்பார்கள் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.அத்துடன், வீதி வகுப்பறை என்ற பெயரில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த புதிய அறிவிப்பு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பதால், அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும், சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளி இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பள்ளி கல்வி கட்டணம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன 2 முக்கியமான விஷயம்
இந்நிலையில், அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு தேர்வுகள் துறை, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது உள்ளிட்டவை தொடர்பாகவும் அரசு தேர்வுகள் துறை, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நவம்பர் 1ஆம் தேதி 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தீபாவளிப் பண்டிகை வருவதால் பண்டிகைக்காலம் முடிந்த பின்னர் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே நவம்பர் 1ஆம் தேதியன்று பள்ளிகளை திறப்பதா வேண்டாமா என்பது குறித்தும், அவ்வாறு திறப்பதாக இருந்தால் அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் இந்த கூட்டதில் ஆலோசிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்ததைக் கருத்தின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான வகுப்புகள், கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி முதல் நடத்த அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.