முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பறந்த புகார்.. தமிழில் வரும் காஷ்மீர் பைல்ஸ் - தடைகோரும் எஸ்.டி.பி.ஐ
சென்னை: ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள காஷ்மீர் பைல்ஸ் படத்தின் தமிழ் பதிப்பிற்கு தடை விதித்து தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை காப்பாற்ற வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் ஜீ 5 நிறுவனத்திடம் எஸ்.டி.பி.ஐ. கட்சி மனு அளித்துள்ளது.
இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மார்ச் மாதம் நாடு முழுவதும் வெளியானது.
விவேக் அக்னிஹோத்ரியின் மனைவி பல்லவி ஜோஷி, முன்னணி நடிகர் அனுபவம் கேர் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் அந்த படம்தான் தேசிய அரசியலில் விவாதப் பொருளாக மாறியது.
காஷ்மீர் நிலை, உபா சட்டம்! பட்டியல் போட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்பு குழு! முக்கிய மீட்டிங்! என்னாச்சு
பிரதமர் மோடியின் பாராட்டை பெற்ற படம்
80 களின் பிற்பகுதியில் ஏற்பட்ட ஜம்மு காஷ்மீர் வன்முறை சமயத்தில் அங்கிருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதாக இந்த படத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை அண்மையில் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியையும் படக்குழுவையும் நேரில் அழைத்து பாராட்டினார்.
சலுகை கொடுத்த பாஜக மாநில அரசுகள்
இந்த படத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், கோவா, திரிபுரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா, குஜராத், உத்தராகண்டில் வரி விலக்கு அளிக்கப்பட்டன. மத்திய பிரதேசத்தில் இந்த படத்தை பார்க்க செல்லும் போலீசாருக்கு ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டது. அதே போல் மற்ற சில மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்ப்பதற்காக விடுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கடும் எதிர்ப்பு
இந்த படம் குறித்து கேரள மாநில காங்கிரஸ் வெளியிட்ட பதிவில், "காஷ்மீர் தாக்குதல்களின்போது பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பு அளிக்காமல் அப்போது ஆளுநராக இருந்த பாஜக - ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஜக்மோகன் அவர்களை காஷ்மீரை விட்டு வெளியேற சொன்னார்." எனக் குற்றம்சாட்டியது. அதே போல் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலும் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். தமிழ்நாட்டின் முற்போக்கு அமைப்புகள் இதற்கு எதிராக தங்கள் கண்டனங்களை பதிவிட்டு வந்தனர்.
தமிழாக்கம்
இந்த நிலையில் இப்படம் வரும் ZEE5 ஓ.டி.டி. தளத்தில் இன்று இரவு வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. இதனிடையே இனவெறியை தூண்டும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தின் தமிழாக்கத்தை தடை செய்ய வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் டி.ரத்தினம் சார்பாக புகார் மனு அளித்துள்ளார்.
ஜீ 5 ஓடிடிக்கும் கடிதம்
"இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறியூட்டுதலை நோக்கமாகக் கொண்ட புனைவுகளின் அடிப்படையிலான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தை ZEE5 ஓ.டி.டி. தளம் வழியாக ஒளிபரப்பி, தமிழகத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைக்க ZEE5 நிறுவனம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது." என்பதை வலியுறுத்தி, ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரிக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் டி.ரத்தினம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.