பெட்ரோல் குண்டுவீச்சு.. பாஜகவுக்கு அடிபணிவதா? அப்பாவிகளை விடுவிக்கனும் -எஸ்டிபிஐ செயற்குழு தீர்மானம்
சென்னை: பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல்களில் கைது செய்யப்பட்டு இருக்கும் அப்பாவிகளை காவல்துறை விடுவிக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் உள்ள மாநில தலைமையகத்தில் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் அப்துல் ஹமீது, எஸ்.எம்.ரஃபீக் அகமது, மாநில பொதுச்செயலாளர்கள் அச.உமர் பாரூக், அகமது நவவி, நிஜாம் முகைதீன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸூருத்தின், பொருளாளர் அமீர் ஹம்சா, செயலாளர்கள் ரத்தினம், அபுபக்கர் சித்திக், ஏ.கே.கரீம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை, பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் எஸ்டிபிஐ கட்சியினர் கைது போன்ற சம்பவங்களுக்கு பிறகு நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் இல்லங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. தமிழகத்தில் நிலவும் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் சில சதிகார கும்பல்களால் திட்டமிட்டே இதுபோன்ற சம்பவங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பொய்யான குற்றச்சாட்டுகள்.. என்ஐஏ ரெய்டில் அதிகாரிகள் அத்துமீறலிலும் ஈடுபட்டனர்: எஸ்.டி.பி.ஐ. தலைவர்
பாஜக நெருக்கடி
இந்த சம்பவங்கள் தொடர்பாக காவல்துறை நேர்மையான முறையில் விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுடன் தொடர்பில்லாத எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மீது கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையின் இந்த நடவடிக்கை விசாரணையின் அடிப்படையில் அல்லாமல், பாஜகவின் நெருக்கடிக்களுக்காக எவ்வித ஆதாரமும் இல்லாமல் அவசரக் கோலத்தில் தவறான முறையில் நடைபெற்றுவருவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி உறுதிபட கூறுகிறது.
பாஜகவின் போலி தாக்குதல்
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை திட்டமிட்டு சீர்குலைக்கவும், அதன் மூலம் தமிழக அரசுக்கு நெருக்கடி தரவும் பாஜக மேற்கொள்ளும் திட்டமிட்ட அரசியல், கடந்த காலங்களில் விளம்பரத்துக்காகவும், போலீஸ் பாதுகாப்புக்காகவும் பாஜகவினர் மேற்கொண்ட போலி தாக்குதல்கள் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, நேர்மையான முறையில் காவல்துறை விசாரணை நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
விடுவிக்க வேண்டும்
சிறுபான்மை விரோதப்போக்கு கொண்ட பாஜகவின் அரசியல் நிர்பந்தங்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு தமிழக காவல்துறை ஒருபோதும் அடிபணிந்துவிடக் கூடாது. இந்த விவகாரத்தில் அவசரக் கோலத்தில் அப்பாவிகளை சிறைப்படுத்தாமல், நேர்மையான முறையில் விசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகளை கைது செய்திட வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சினரையும், அப்பாவிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இந்த செயற்குழு கூட்டம் வலியுறுத்துகிறது.
கோவையில் தாக்குதல்
கோவையில் கைது செய்யப்பட்டவர்கள் மீது மோசமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. நள்ளிரவு வேளைகளில் இஸ்லாமியர்களின் இல்லங்களை தட்டி விசாரணைக்கு காவல் நிலையம் அழைப்பது போன்ற நிகழ்வுகளும் கடந்த சில நாட்களாக நடந்து வருகின்றன. கோவையை முன்வைத்து சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக காவல்துறையால் நடத்தப்படும் இதுபோன்ற நடவடிக்கைகள் நடைபெறுவதை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்திட வேண்டும்.
அறிவிக்கப்படாத எமர்ஜென்சி
இந்த விவகாரத்தில் தமிழக முதல்வரும், டிஜிபியும் கவனமெடுத்து அமைதியான, சுமூகமான சூழலை உருவாக்க வேண்டும் எனவும் இந்த செயற்குழு கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஜனநாயக அமைப்புகளின் மீது நெருக்கடி கொடுத்து தடை நடவடிக்கை மேற்கொண்ட ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கை அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியின் ஒரு பகுதியாகும்.
ஜனநாயக சக்திகள்
என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மூலம் அரசியல் தலைவர்கள், சமூக மற்றும் மனித உரிமை போராளிகள், ஊடகவியலாளர்கள், அறிவு ஜீவிகள் போன்றோரை அச்சுறுத்தும் வகையில், அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகள் மறுக்கப்படுவதோடு, யு.ஏ.பி.ஏ. உள்ளிட்ட சட்டங்களை தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோத சோதனைகள், கைதுகள் மூலம் ஜனநாயக சக்திகளின் குரல்வலைகள் நெறிக்கப்படுகின்றன.
பன்முகத்தன்மைக்கு ஆபத்து
இத்தகைய போக்குகள் ஜனநாயகத்தின் நலனுக்கும், அதன் பன்முகத்தன்மைக்கும் மிகப்பெரும் ஆபத்தாகும். ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகளை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். அநீதிக்கும், மாநில உரிமைகளை பறிக்கும் அரசியலமைப்புக்கு எதிரான கொள்கைகளுக்கும், சர்வாதிகார ஆட்சிக்கும் எதிராக குரல் எழுப்பி மக்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமை என இந்த செயற்குழு வலியுறுத்துகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.