நீதிமன்றம் இருக்கட்டும்.. இப்ப ‘பந்து’ அப்பாவு கோர்ட்டில்.. திமுக பிளான் என்ன? நெருங்கும் ரிசல்ட்!
சென்னை : ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகளின் மோதலால், தமிழக சட்டப்பேரவை கூடும்போது 'சீட்' விவகாரம் அனலைக் கிளப்பப்போகிறது. திமுக மற்றும் சபாநாயகர் அப்பாவுவின் முடிவு என்னவாக இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இரு தரப்பினர் மத்தியிலும் கடுமையாக எழுந்துள்ளது.
அதிமுகவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையேயான உட்கட்சி பூசலால் கடந்த 4 மாதங்களாக அரசியல் பரபரப்பு உச்ச நிலையில் உள்ளது. அதிமுகவில் இப்போது எடப்பாடி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என்று இரு தரப்பினர் இருக்கின்றனர்.
இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஜூலை 11 பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், மாறி மாறி வரும் தீர்ப்புகளால் அதிமுக இப்போது யார் தலைமையில் இயங்குகிறது என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்த விவகாரத்தை எப்படி கையாளும் என்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக, தமிழக சட்டமன்றம் கூடும்போதும், இந்த விவகாரம் அனலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சந்தலையில் சுத்தியல்.. டெல்லி வைத்தியம் எப்டி? இந்த 'கேப்’புல திருந்துங்க.. சீண்டும் ஓபிஎஸ் டீம்!
ஓபிஎஸ் vs ஈபிஎஸ்
அதிமுகவில் ஏற்பட்ட ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலால் ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டு ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் பொதுக்குழுவிலேயே நீக்கப்பட்டனர். பின்னர், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டனர். ஆனால், அவர்களை நீக்கியது செல்லாது எனக் கூறி ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி தரப்பினரை கட்சியை விட்டு நீக்கினார்.
ஓபிஎஸ் இடத்தில்
ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டு அந்தப் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. ஓபிஎஸ் வகித்து வந்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் பறித்தார் எடப்பாடி பழனிசாமி. எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, ஆர்.பி.உதயகுமார் அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அதனை அதிகாரப்பூர்வமாக நியமிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அனுப்பினார்.
மாற்றி மாற்றி கடிதம்
அதேநேரம், எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்றக்கூடாது என ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் கடிதம் அளித்திருந்தார். இரு தரப்பினரும் மாற்றி மாற்றி கடிதம் அளித்ததால், சபாநாயகர் அப்பாவு எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் அப்பாவுதான் இனி இறுதி முடிவு எடுப்பார். மேலும், சட்டமன்றத்தில் இருக்கைகள் ஒதுக்குவது தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி சார்பில் சபாநகர் அப்பாவுவிற்கு கடிதம் அளிக்கப்பட்டது.
சீட் மேட்டர்
ஆளுங்கட்சியினர் ஒருபக்கம், எதிர்க்கட்சியினர் ஒருபக்கம், மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் அடுத்தடுத்து என சட்டமன்றத்தில் இருக்கை ஒதுக்கப்படுவது வழக்கம். ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் அருகருகே அமர்ந்திருப்பார்கள். இப்போது, அதிமுகவில் மோதல் எழுந்திருப்பதால், ஓபிஎஸ் தரப்பினரை கட்சியில் இருந்தே நீக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதனால், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய எம்.எல்.ஏக்களை முன்பு இருக்கும் இருக்கைகளில் அதிமுக எம்.எல்.ஏக்களோடு அமர வைக்காமல், வேறு பக்கம் இருக்கை ஒதுக்குமாறும், புதிதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்பி உதயகுமார், துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு முன்புறம் இருக்கை ஒதுக்க வேண்டும் என்றும் கோரியிருப்பதாகத் தெரிகிறது.
சட்டப்பேரவை கூட்டம்
சட்டபேரவை கூட்டம் இந்த மாத மத்தியில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டம் சட்ட மசோதா நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சட்டசபை வளாகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அதிமுக விவகாரத்தில் சட்டசபை சபாநாயகர் என்ன முடிவை எடுத்திருக்கிறார்? அதிமுகவில் யாருடைய கோரிக்கையை ஏற்றிருக்கிறார்? ஓ.பன்னீர்செல்வம் டீமுக்கு எப்படி சீட் ஒடுக்கப்பட இருக்கிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக எழுந்திருக்கிறது.
எல்லாம் சரியா நடக்கும்
இதுதொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, அதிமுக 4 அணிகளாக உள்ளது. அதிமுக பிரச்சனை தொடர்பாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை வழக்குகள் சென்றுள்ளது. உயர் நீதிமன்றத்தில் ஒரு தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வருகிறது. இதையும் தாண்டி தேர்தல் ஆணையம் உள்ளது. அரசியில் கட்சிகளுக்கு முடிவு சொல்லக்கூடிய இடம் அதுதான்.
சபாநாயகர் அப்பாவு
சட்டமன்றத்தை பொறுத்தவரை சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி தலைவர், துணை தலைவர், அவர்களுக்கு என்ன பதவி, இந்த இடத்தில் இருக்கை ஒதுக்குவது என்பது சபாநாயகரின் முழு உரிமை. அதிமுக பிளவால் எந்த பிரச்சினையும் சட்டப்பேரவையில் வராது. சட்டசபை நடைபெறும்போது பாருங்கள்.. எல்லாமும் சரியாகவே நடக்கும்.. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
திமுக முடிவு என்ன?
அதிமுகவில் யாருக்கு உரிமை என்பது உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் உறுதியாகாத நிலையில், அதற்குள் முக்கியமான முடிவை எடுக்கவேண்டிய பொறுப்பு திமுகவின் கைக்கு வந்துள்ளது. நடைபெற இருக்கும் சட்டமன்ற கூட்டத்தில், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக யாரை அங்கீகரிக்கப்போகிறார் அப்பாவு, எடப்பாடி பழனிசாமி டீம் கேட்டபடி சீட்கள் மாற்றப்படுமா என்பதற்கெல்லாம் விடை கிடைக்கும். அதன் மூலம் ஓபிஎஸ் - ஈபிஎஸ் விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடும் திட்டவட்டமாகத் தெரியவரும்.