தமிழகத்தில் 2-ம் கட்ட முதுநிலை மருத்துவ கலந்தாய்வு தொடக்கம்.. 3 நாட்கள் நடைபெறுகிறது
சென்னை: தமிழகத்தில் 2-ம் கட்ட முதுநிலை மருத்துவ கலந்தாய்வு, சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இன்று துவங்கியுள்ளது. இதில் முதற்கட்ட கலந்தாய்வில் நிரம்பாத 345 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இன்று முதல் ஏப்ரல் 29 வரை எம்.டி, எம்.எஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வின் முதல் நாளான இன்று, தரவரிசை மதிப்பெண் 1007.50 - 550 வரை உள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி, எம்.எஸ் பட்ட மேற்படிப்புகளுக்கு 1,761 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 849 இடங்கள் போக, மீதமுள்ள 912 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களாகும். தவிர தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்காக 181 இடங்கள் இருக்கின்றன.
இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த 1-ம் தேதி தொடங்கி 4-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் 999 இடங்கள் நிரம்பின. தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரி இடங்களுக்கான கலந்தாய்வு 5-ம் தேதி நடைபெற்றது,
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு எம்.டி, எம்.எஸ் இடங்களுக்கான கலந்தாய்வு 6-ம் தேதியும் நடைபெற்றது. முதல்கட்ட கலந்தாய்வு முடிவில் மீதமுள்ள இடங்கள், கல்லூரிகளில் சேராதவர்களால் ஏற்பட்ட காலியிடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிலிருந்து திரும்ப கிடைக்கும் இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.