இந்தோ-பசிபிக் பிராந்தியம் அச்சுறுத்தலின்றி பாதுகாக்கப்பட வேண்டும்: குவாட் அமைப்பு உறுதி! சீனா கோபம்
மெல்போர்ன்: ‛‛இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பிற நாடுகளின் ஆக்கிரமிப்பு, அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க வேண்டும்'' என ‛குவாட்'அமைப்பின் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.
நிலம் தொடர்பான அரசியல் குறித்து விவாதிக்கும் அமைப்பு ‛குவாட்' ஆகும். இதில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
ஆண்டுதோறும் குவாட் மாநாடு நடத்தி பிற நாடுகளின் நில ஆக்கிரமிப்பு உள்பட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தி, அதுதொடர்பாக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
4 வது குவாட் மாநாடு
அந்த வகையில் தற்போது 4 வது குவாட் மாநாடு ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் நடந்தது. அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மாரீஸ் பெய்ன் உள்ளிட்டோர் குவாட் மாநாட்டில் பங்கேற்றனர்.
இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பு
மாநாட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்தோ - பசிபிக் கடல் பிராந்தியத்தை பிற நாடுகளின் ஆக்கிரமிப்பிலிருந்தும், அச்சுறுத்தலில் இருந்தும் பாதுகாக்க வேண்டும் என உறுதி எடுக்கப்பட்டது.
சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராகவும், இந்தியாவில் அமைதி, நிலைத்தன்மையை சீர்குலைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பில் ஈடுபடும் சீனா, பயங்கரவாதத்தை தூண்டும் பாகிஸ்தான், அணுஆயுதம், ஏவுகனை சோதனையை தொடர்ந்து மேற்கொண்டு வரும் வடகொரியா ஆகிய நாடுகளுக்கு நேரிடையாகவும், மறைமுகமாவும் எச்சரிக்கை விடப்பட்டது.
ஆக்கப்பூர்வ முடிவுகள்
மாநாடு பற்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ‛‛வெளியுறவுத்துறை அமைச்சர்களின் நான்காவது குவாட் மாநாடு நன்றாக முடிந்தது. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜேபைடன், ஜப்பான் பிரதமர் பியூமியோ கிஷிடா ஆகியோரின் வழிக்காட்டலில் 2021 செப்டம்பர் மாதம் குவாட் மாநாடு நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் நிலை குறித்து தற்போது விவாதிக்கப்பட்டது. இதில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன,'' என்றார்.
அடுத்த மாநாடு எங்கே
மேலும் அடுத்த குவாட் உச்சி மாநாடு 2022 முதல் பாதியில் ஜப்பானில் நடைபெறும் என்று ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி கூறினார். முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனை, 4 நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
சீனா கோபம்
இந்த மாநாடு குறித்து சீனா, கோபமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‛‛சர்வதேச அளவில் சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ‛குவாட்' அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நாடுகளுக்கு இடையே மோதலை தூண்டிவிடுவது தான் இதன் நோக்கம். குவாட் அமைப்பின் இந்த நோக்கம் தோல்வி அடையும்'' என கூறப்பட்டுள்ளது.