சீமான் கைது செய்யப்பட்டு விடுவிப்பு! சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பரபரப்பு!
சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்ற நிலையில், அவர்களுக்கு ஆதரவாக சென்ற சீமானும் கைது செய்யப்பட்டார்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் மாவட்ட நிர்வாகத்தால் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களை மகளிர் மேம்பாட்டு நிறுவன பணியாளர்களாக அங்கீகரித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் பணியாளர்களை காலமுறை ஊதியம் வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

இதில் மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், போராட்டம் நடத்தியவர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினார்.
அப்போது காவல்துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. “நான் இந்த நாட்டின் குடிமகன் தான். இங்கே இருக்க எனக்கு உரிமை இல்லையா?” என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். அப்போது ஊரக உள்ளாட்சி பணியாளர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். அவர்களுடன் என்னையும் கைது செய்யுங்கள் என்றவாறு சீமானும் வேனில் ஏறினார். அவரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் சீமான் விடுவிக்கப்பட்டார். சீமான் கைது செய்யப்பட்டால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்க கூட அனுமதி இல்லையா?” என கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications