சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி?.. நாம் தமிழர் சீமான் பரபரப்பு விளக்கம்
சென்னை: சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கடந்த 2010-ஆம் ஆண்டு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
போலீஸார் அனுமதி அளித்த நேரத்தை விட கூடுதல் நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் அந்த கூட்டத்தில் சட்டத்திற்கு புறம்பான வகையில் பேசியதாகவும் சீமான் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
சீமான் நீதிமன்றத்தில் ஆஜர்
இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது சீமான் நீதிமன்றத்தில் ஆஜரானார். அதன் பின்னர் வழக்கு விசாரணை ஜனவரி 5-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
அரசியல்
இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், நடிகர் ரஜினியின் திரைப்படங்களை யாரும் குறை சொல்வதில்லை. ஆனால் அரசியலில் தமிழர்களுக்கு ஒரு கோட்பாடு கொள்கை உள்ளது.
அடிபட்டு வீழ்ந்த இனம்
வரலாற்றில் அடிபட்டு வீழ்ந்த இனம் மீண்டும் எழும்போது எங்கிருந்தோ வந்தவன் வழி நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நிலமே எங்கள் உரிமை என ரஜினிகாந்த் ஒரு சினிமாவில் கூறியதையே நாங்களும் சொல்கிறோம். ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் எம்ஜிஆரை பற்றி பேசி அதிமுகவின் வாக்கு சேகரிப்பாளராக உள்ளனர்.
நாடாளும் தகுதி
ரஜினி, கமல் ஆகியோருக்கு ஈழம் பற்றிய நிலைப்பாடு என்ன என்பதை அறிவிக்க வேண்டும். ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு பாடம் புகட்டுவதன் மூலம் எந்த நடிகரும் இனி அரசியலுக்கு வரக் கூடாது. நடிப்பதால் மட்டுமே நாடாடளும் தகுதி வந்துவிடுவதாக எண்ணும் எண்ணம் மாற வேண்டும்.
தனித்து போட்டி
நான் சினிமாவில் இருந்து வந்திருந்தாலும் ரசிகர்களை சந்திக்கவில்லை, மக்களை சந்தித்தேன். சட்டசபை தேர்தல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.