அகலமாக விரிந்த இந்திய ரயில்வே.. மறக்க முடியாத ஜாபர் ஷெரீப்!
-ஆர். மணி
சென்னை: கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜாஃபர் ஷெரீஃப் நவம்பர் 25 ம் தேதி பெங்களூர் மருத்துவமனை ஒன்றில் காலமானார். இருதய கோளாறால் பல ஆண்டுகளாக பாதிக்கப் பட்டிருந்த ஜாஃபர் ஷெரீஃப், மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 85.
1995 ம் ஆண்டே அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார் ஜாஃபர் ஷெரீஃப். மூன்று முறை மத்திய அமைச்சராக, மூன்று பிரதமர்களுடன் – இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, பி.வி. நரசிம்ம ராவ் – பணியாற்றிருக்கிறார்.
அறுபது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பொது வாழ்க்கைக்கு சொந்தக் காரராக இருந்தவர் ஜாஃபர் ஷெரீஃப். ஆனால் அவர் வெளியுலகிற்கு 1969 ம் ஆண்டுதான் தெரிய வந்தார். 1969 ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான கர்நாடகத்தை சேர்ந்த நிஜலிங்கப்பா, தமிழகத்தை சேர்ந்த கே.காமராஜ் உள்ளிட்டோர் இந்திரா காந்தியின் எதேச்சாதிகார போக்கு பிடிக்காமல் காங்கிரசிலிருந்து வெளியேறி தனியாக கட்சி தொடங்கினர். அதற்கு காங்கிரஸ் (ஓ) (அதாவது, பழைய காங்கிரஸ் (old Congress) என்று பெயர்.
நிஜலிங்கப்பாவின் கார் டிரைவர்
அப்போது நிஜலிங்கப்பாவின் கார் டிரைவராக இருந்தவர் தான் ஜாஃபர் ஷெரீஃப். ஒரு நாள் நிஜலிங்கப்பா பயணம் செய்த காரை ஓட்டிச் சென்ற ஜாஃபர் ஷெரீஃப், நிஜலிங்கப்பா அன்றைய இரவு முக்கியமான முடிவை எடுக்கப் போகிறார் என்பதை நிஜலிங்கப்பா காரில் அவருடன் பயணித்துக் கொண்டிருந்த வேறு ஒரு மூத்த காங்கிரஸ் தலைவருடன் பேசியதை கேட்டார். உடனடியாக அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு ஜாஃபர் ஷெரீஃப் இந்த தகவலை, இந்திரா காந்திக்கு நெருக்கமான சிலர் மூலம் சொல்லி அனுப்பி விட்டார். அதற்கு பிரதியுபகாரமாக 1971 மக்களைவை தேர்தலில் ஜாஃபர் ஷெரீஃப் புக்கு இந்திரா காந்தி எம்.பி சீட் கொடுத்தார். அதில் வென்று மக்களவை எம்.பி ஆனார் ஷெரீஃப்.
மத்திய அமைச்சரானார்
அதன் பின்னர் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அமைச்சரைவையில் மத்திய இணை அமைச்சராக பதவி வகித்தார். 1991 - 1995 ம் ஆண்டில் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்தார். இந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் மீட்டர் கேஜ் பாதைகளாக இருந்த ரயில் பாதைகளை பெரியளவில் பிராடு கேஜ் பாதைகளாக மாற்ற முக்கிய பங்காற்றியவர் ஜாஃபர் ஷெரீஃப். சில நேரங்களில் ஜாஃபர் ஷெரீஃபின் முரண்பாடுகள் ஆச்சரியமானதாக இருந்திருக்கின்றன. உதராணத்திற்கு, ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றியும், ஆர்எஸ்எஸ்ஸூடன் அவருக்கிருந்த அவரது உறவையும் சொல்லலாம். சில மாதங்களுக்கு முன்பு குடியரசு தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவருமான பிரணாப் முகர்ஜி, ஆர்எஸ்எஸ் அழைப்பை ஏற்று, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகமான, மஹாராஷ்டிராவில் இருக்கும் நாக்பூர் சென்றார். அங்கு ஆர்எஸ்எஸ் தொண்டர்களிடம் உரையாற்றினார். இதனை கடுமையாக எதிர்த்து ஒரு அறிக்கை வெளியிட்டார் ஜாஃபர் ஷெரீஃப்.
ஆர்எஸ்எஸ்ஸுக்கு கண்டனம்
அதில் ஷெரீஃப் இப்படி கூறியிருந்தார்; ‘'பிரணாப் முகர்ஜி ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்துக்கு போவது ஆச்சரியமாக இருக்கிறது, அதிர்ச்சியாக இருக்கிறது. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ் காரராக இருந்தவர்தான் பிரணாப் முகர்ஜி. திடீரென்று ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்துக்கு போகிறார் பிரணாப் முகர்ஜி. தன்னுடைய இந்த முடிவு பற்றி பிரணாப் முகர்ஜி யாருடனும் விவாதிக்கவில்லை. திடீரென்று ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் போகிறார். நான் ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் (ஆர்எஸ்எஸ்) சங்க பரிவாரத்தை பற்றி, மத்திய அமைச்சராகவும், காங்கிரஸ் மூத்த தலைவராகவும் இருக்கும் காலகட்டங்களில் பிரணாப் முகர்ஜி கீழ்கண்டவாறு பேசியதை, அதாவது, ‘ஆர்எஸ்எஸ் மோசமான ஒரு அமைப்பு, அடிப்படையில் மதவாத அமைப்பு. ஆர்எஸ்எஸ் அடிப்படையில் ஒரு தேச விரோத அமைப்பு மற்றும் தேசபக்தி இல்லாத அமைப்பு' என்று பிரணாப் முகர்ஜி கூறிய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளுகிறீர்களா?'' என்று கேட்டிருந்தார். இதற்கு பிரணாப் முகர்ஜியும் பதில் சொல்லவில்லை. ஆர்எஸ்எஸ் ஸூம் பதில் சொல்லவில்லை.
மோஹன் பகவத்துக்கு ஆதரவு
இதில் சுவாரஸ்யமான விஷயம். இதே ஜாஃபர் ஷெரீஃப் தான் 2017 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் நரேந்திர மோடி க்கு எழுதிய ஒரு கடிதத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பின தலைவர் மோஹன் பகவத்தை இந்தியாவின் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு நீங்கள் (மோடி) முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கடுத்து இது பற்றி ஜாஃபர் ஷெரீஃப் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறும் போது ‘'மோஹன் பகவத் ஒரு தத்துவத்தின் பிரதிநிதியாக இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் நான் கருதுவது என்னவென்றால் எவரும் மோஹன் பகவத்திடம் தவறு எதையும் காண முடியாது. முஸ்லீம்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையின மக்களும், மோஹன் பகவத்தை பார்த்து அச்சப்பட தேவையில்லை, அவரைப் பற்றிய எத்தகைய நம்பிக்கையற்ற உணர்வையும் கொள்ளத் தேவையில்லை'' என்று கூறியிருந்தார்.
காங்கிரஸ் டிக்கெட் இல்லை
2009 ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார் ஜாஃபர் ஷெரீஃப். ஆனால் காங்கிரஸ் கட்சி அவருக்கு டிக்கெட் தரவில்லை. இதனால் கோபமடைந்திருந்த ஷெரீஃப்புக்கு 2014 மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிட வாய்ப்பு தரவில்லை. இது ஜாஃபர் ஷெரீஃப் பின் கோபத்தை மேலும் வளர்த்தது. அதனது வெளிப்பாடுதான் 2017 ஏப்ரலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோஹன் பகவத்தை குடியரசு தலைவராக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதும் அளவுக்கு கொண்டு சென்றது. ஜாஃபர் ஷெரீப் பின் அரசியல், குறிப்பாக அவரது வாழ்நாளின் கடைசி நாட்களில் அவரது அரசியல் எப்படிபட்டதாக இருந்தாலும், இந்திய ரயில்வே துறையில் அவர் கொண்டு வந்த முன்னேற்றங்களும், குறிப்பாக பெரியளவுக்கு நாட்டின் ரயில்வே பாதைகளை மீட்டர் கேஜ் களில் இருந்து பிராட் கேஜ் களாக மாற்றுவதில் செய்த சாதனைகளும் என்றென்றும் நினைவு கூறப்படும். இதில் எவருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது என்பதுதான் தற்போதய நிதர்சனம்.