ஏனுங்க இது தாராபுரம் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையா..? ... செம அப்செட்டில் தமிழக பாஜக சீனியர்கள்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்காக பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையானது அந்த கட்சியின் மூத்த தலைவர்களிடையே மிக கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் தேர்தல் அறிக்கைகள் வாக்காளர்களிடையே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. தமிழ்ச் சமூகத்தின் அரசியல் புரிதல் அவ்வளவு ஆழமானது.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் மிகவும் மெனக்கெட்டு தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். இந்த முறை திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க தமிழகம் முழுவதும் குழுக்களை அனுப்பி ஒவ்வொரு பகுதி பிரச்சினைகளையும் ஆராய்ந்தது.
கட்சிகள் தேர்தல் அறிக்கை
அதன் எதிரொலியாக ஒவ்வொரு மாவட்டத்துக்குமான தேர்தல் அறிக்கை போல வெளியிடப்பட்டுள்ளது. அதிமுகவின் தேர்தல் அறிக்கையும் ஏறக்குறைய இதே பாணியில்தான் வெளியாகி இருக்கிறது. பாமக, மதிமுக என ஒவ்வொரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையும் விவாதத்துக்கும் ஆய்வுகளுக்கும் உரியது. தேசிய கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் கூட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை திராவிட சாயலில் இருக்கிறது.
பாஜக தேர்தல் அறிக்கை
ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கைதான் அத்தனை குழப்பத்தில் இருக்கிறது. அதாவது இந்துத்துவா கொள்கையையும் பேச வேண்டும்; தமிழகத்தில் அதற்கு எதிர்ப்பு வராமலும் இருக்க வேண்டும்; தமிழ்நாட்டு பிரச்சனைகளை பேச வேண்டும் என்றெல்லாம் பலவாறு யோசித்து படுகுழப்பமான தமிழ்நாட்டில் இருந்து தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்கிற ஒரு தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள் தமிழக பாஜகவினர்.
பழமைவாதம் அப்பட்டம்
இந்த தேர்தல் அறிக்கைக்கு தலைப்பு தொலைநோக்குப் பத்திரம். இதில் வழக்கொழிந்து போன லை எழுத்து முறையை பின்பற்றி இருக்கிறார்கள். பத்திரம் என்பது சமஸ்கிருத சொல். இந்த தேர்தல் அறிக்கையின் தலைப்பே இப்படியான ஒரு கேள்வியைத்தான் எழுப்புகிறது... ஆமா இவங்க யாரு? எந்த காலத்தில் வாழ்கிறார்கள்? என்பதற்கு ஏற்ப பாசானம் பிடித்த பழமைவாத முகம் பச்சை பசேல் என தெரிகிறது. உள்ளேயும் பல இடங்களில் வழக்கில் இல்லாத 1980களுக்கு முந்தைய அதாவது பழங்கால எழுத்துமுறையை பின்பற்றி இருக்கிறார்கள்.
தாராபுரத்துக்கான தேர்தல் அறிக்கையா?
அத்துடன் இந்துத்துவா கொள்கையைப் பேசியாக வேண்டும் என்பதற்காக தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவோம்; பசுவதை தடை சட்டம் கொண்டு வருவோம் என ஏகத்துக்கும் பேசியிருக்கிறார்கள். இவைகூட பிரச்சனை இல்லை. தேர்தல் அறிக்கையின் பல இடங்களில் தாராபுரம் தொகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. இதுதான் பாஜக சீனியர் தலைவர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. இது என்ன தாராபுரம் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையா? என்ற கேள்வி கமலாலயத்தில் இயல்பாகவே விவாதிக்கப்பட்டும் வருகிறது. அட பரிதாபமே!