தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் ... எல். முருகனை விசாரியுங்க.. டெல்லிக்கு காவடி தூக்கிய பாஜக சீனியர்கள்
சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியில் மீண்டும் அக்கப்போர் வெடித்துள்ளது. தமிழக பாஜக தலைவர் எல். முருகனுக்கு எதிராக பல சீனியர் தலைவர்கள் டெல்லி மேலிடத்துக்கு புகார்களை அனுப்பி வைத்துள்ளனராம். தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இது தொடர்பாக டெல்லியில் பஞ்சாயத்து நடைபெற போகிறதாம்.
தமிழக பாஜக தலைவராக அசைக்க முடியாத நபராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்தார். அவரை எப்படியாவது மாற்ற வேண்டும் என்பதற்காக பாஜக சீனியர்கள் பலரும் டெல்லியுடன் முட்டி மோதினர்.
ஆனால் டெல்லியில் தமிழிசை சவுந்தராஜன் வைத்திருந்த லாபி முன்பாக சீனியர்களின் இந்த முட்டல் மோதலுக்கு பலன் கிடைக்கவில்லை. மாறாக தமிழிசை சவுந்தரராஜனை ஆளுநராக்கியது டெல்லி மேலிடம்.
கொரோனா விஸ்வரூபம்: நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானலுக்கு செல்ல அனைத்து நாட்களுக்கும் தடை- தமிழக அரசு
தமிழக தலைவர்ராக முருகன்
இதையடுத்து புதிய பாஜக தலைவர் பதவிக்கு பலரது பெயரும் அடிபட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் எல். முருகன், தமிழக பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டார். இதனால் இலவு காத்த கிளிகளாக இருந்த தமிழக சீனியர்கள் படுஅப்செட்டாகிப் போகினர்.
முருகனின் யாத்திரை
எல். முருகனும் வேல் யாத்திரை என ஆரம்பித்து தமிழக பாஜகவை லைம் லைட்டிலேயே வைத்துக் கொண்டார். இதனால் ஊடகங்களில் தவறாமல் இடம்பிடித்தார் எல். முருகன். ஆனால் இந்த வேல் யாத்திரை பெரிய அளவுக்கு ஒர்க் அவுட் ஆகாத சூழலில் தேர்தல் வந்துவிட்டது.
60 சீட் பேரம்
அதிமுகவிடம் 60 தொகுதிகளை வாங்குவோம் என்றெல்லாம் சவுண்டு விட்டுப் பார்த்தால் எல். முருகன். அதாவது ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார்; அவருடன் இணைந்து கொள்ளலாம்; அதுவரை அதிமுகவை மிரட்டிப் பார்க்கலாம் என்பதற்காகவே இந்த 60 தொகுதி உதாரையெல்லாம் முருகன் விட்டுப்பார்த்தார். ஆனால் ரஜினிகாந்த் டாட்டா காட்டிவிட வேறுவழியே இல்லாமல் அதிமுகவிடம் சரணடைந்தது தமிழக பாஜக.
கறார் காட்டிய அதிமுக
மேலும் இதுவரை எந்த ஒரு கட்சியுமே செய்யாத வேலையாக, அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்னரே குஷ்புவுக்கு சேப்பாக்கம், கவுதமிக்கு ராஜபாளையம் என தமிழக பாஜகவினரே தொகுதிகளை ஒதுக்கிக் கொண்டு தேர்தல் பிரசாரம் செய்தனர். ஆனால் அதிமுகவோ 20 தொகுதிகள்தான் தருவோம் என்று கூறியதுடன் நீங்கள் பிரசாரம் செய்தாலும் பரவாயில்லை என பாஜக கேட்ட அத்தனை தொகுதிகளையும் ஒதுக்கவில்லை.
முருகன் மீது அதிருப்தி?
இதில் பாஜகவின் தமிழக நிர்வாகிகள் பலருக்கும் படு அதிருப்தியாம். மேலும் தேர்தல் பிரசாரத்துக்கு தமிழகம் முழுவதும் எல். முருகன் செல்லவும் இல்லை. தமது தாராபுரம் தொகுதியை மட்டுமே பார்த்துக் கொண்டார். கட்சி சீனியர்கள் பலரையும் எல். முருகன் தொடர்ந்து புறக்கணித்ததால் இப்போது அந்த கோபத்தை காட்டி வருகின்றனராம். அதனால்தான் எல். முருகன் மீது ஏகப்பட்ட புகார்களுடன் டெல்லிக்கு கடிதம் மேல் கடிதம் அனுப்பி வைக்கிறார்களாம்.
சீனியர்கள் மீது புகார்
ஆனால் எல். முருகன் தரப்போ, இந்த கடிதங்கள் தொடர்பாக டெல்லி அழைக்கட்டும்.. அப்போது எங்கள் தரப்பு விளக்கத்தை தர தயாராக இருக்கிறோம். எந்தெந்த சீனியர்கள் எப்படியெல்லாம் தேர்தலின் போது பதுங்கினார்கள்; உள்ளடி வேலை செய்தார்கள் என்ன நாங்களும் சொல்லுவோம் என்கின்றனர். கமலாலயத்தில் இப்போது இதுதான் ஹாட்டாப்பிக்காம்.