‛முதல்வர் சொன்னால் ஆளுநர் செய்யணும்’.. அதுக்குத்தான் சம்பளம்! ஸ்டாலினுக்கு ஆதரவாக முழங்கிய சீமான்!
சென்னை: செந்தில் பாலாஜியை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யும் விஷயத்தில் ஆளுநர் ஆர்என் ரவியின் செயலை கடுமையாக விமர்சனம் செய்துள்ள சீமான், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக முழங்கிய சம்பவம் இன்று நடந்தது.
தமிழகத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இந்நிலையில் தான் அவரை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அதிமுக ஆட்சிக்காலத்தில் அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது செய்த முறைகேட்டில் அவர் மீது அமலாக்கத்துறயைினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அமலாக்கத்துறை கைது செய்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பைபாஸ் அறுவை சிகிச்சைக்காக அவர் நேற்று காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் காவேரி மருத்துவமனை சிகிச்சையில் உள்ள செந்தில் பாலாஜியை இன்று முதல் வரும் 23ம் தேதி வரை 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலுக்கு வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் செந்தில் பாலாஜி கைதானதால் அவரது துறைகளை மாற்றி அமைக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார். செந்தில் பாலாஜி நிர்வகித்த மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்என் ரவிக்கு பரிந்துரை செய்தார்.
மேலும் செந்தில் பாலாஜியை துறைகள் இல்லாத அமைச்சராக இருக்கவும் முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். இதில் இலாகா மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்த நிலையில் செந்தில் பாலாஜியை துறை இல்லாத அமைச்சராக தொடர வைக்க அவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்என் ரவிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்த வேளையில், ‛‛அமைச்சர்கள் இலாகா மாற்றம் தொடர்பாக ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதற்கு ஆளுநர் நேற்று ஒப்புதல் அளிக்கவில்லை'' என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு சீமான் பதிலளிக்கையில், ‛‛முதல்வர் பரிந்துரை செய்யும் நபருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பது தான் ஆளுநரின் வேலை. முதல்வராக இருப்பவர் தான் அவரது அமைச்சரவை முடிவு செய்வார். யாருக்கு எந்த அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம் தான். இதில் என்ன பிரச்சனை உள்ளது. முதல்வர் சொல்லும் நபருக்கு பதவிபிரமாணம் செய்து வைக்கத்தான் ஆளுநருக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது.
திமிர் போன்ற இந்த நடவடிக்கை எல்லாம் தேவையில்லாதது. அநாகரீகமானது. முதல்வர் என்பவர் 8 கோடி மக்களுக்கான ஒரு அரசின் தலைவர். முதல்வரை நாம் ஏற்கிறோம் அல்லது எதிர்க்கிறோம். ஆனால் அதை தாண்டி அவர் தமிழ்நாட்டின் முதல்வர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆளுநர் என்பவர் ஒருவரால் நியமிக்கப்பட்ட நபர். ஆனால் முதல்வர் என்பவர் அப்படியில்லை. மக்களாட்சியின் தலைவராக முதல்வர் தான் உள்ளார். அவருக்கு உள்ள அதிகாரம் என்பது ஆளுநருக்கு இல்லை. அவர் பரிந்துரைத்தால் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்க வேண்டும்'' என காட்டமாக விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications