சென்னையில் 21% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
சென்னை: சென்னை மாநகராட்சியில் 21% பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து இருப்பது Sero Surveyயில் தெரிய வந்துள்ளது என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ''கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் அக்டோபர் 11ஆம் தேதி வரை 58,493 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 30 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.
மேலும், மாலை 3 முதல் 5 மணி வரைக்கும், 6 முதல் 8 மணி வரைக்கும் மண்டலத்திற்கு 2 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதன்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் தினமும் 30 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
மேலும், சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிய Sero Survey நடத்தப்பட்டது. 12,460 ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதில் 5ல் ஒரு பங்கு, அதாவது 21% பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னையில் மட்டும் மார்ச் 17 முதல் தற்போது வரை 1,82,014 பேர் பாதிக்கப்பட்டு, 1, 64,848 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 13, 751 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். அக்டோபர் 11ஆம் தேதி வரை 15,74,334 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன'' என்றார்.