சங்கர், கோகுல்ராஜ், நந்தீஷ்.. 1000 நாளில் 81 ஆணவ படுகொலைகள்.. என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?
தமிழ்நாட்டில் கடந்த ஆயிரம் நாட்களில் மட்டும் மொத்தம் 81 ஆணவ படுகொலைகள் நடைபெற்று இருக்கிறது.
Recommended Video
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஆயிரம் நாட்களில் மட்டும் மொத்தம் 81 ஆணவ படுகொலைகள் நடைபெற்று இருக்கிறது.
உத்தர பிரதேசம், பீகாரில் நடக்கும் மதக்கலவரங்கள் தமிழர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். அந்த மாநிலங்கள் எல்லாம் இன்னும் முன்னேறவில்லை என்று கூட தமிழகத்தை சேர்ந்தவர்கள் மார்தட்டிக் கொள்ள முடியும்.
ஆனால் தமிழகம் வேறு ஒரு விஷயத்தில் அந்த மாநிலங்களை எல்லாம் விட பின்தங்கி இருக்கிறது. தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களில் மற்ற எந்த மாநிலத்திலும் நடக்காத அளவிற்கு ஆணவக்கொலைகள் நடந்து இருக்கிறது.
[ஒரு சைக்கோவை வேலைக்கு வைத்து.. ரூ.2000 சம்பளமும் கொடுத்த பரிதாப பெற்றோர்]
எத்தனை மரணம்
கடந்த 1000 நாட்களில் தமிழகத்தில் மொத்தம் 81 ஆணவ படுகொலைகள் நடந்துள்ளது. அதாவது 12 நாட்களுக்கு ஒரு ஆணவ கொலை என்ற வீதத்தில் தமிழகத்தில் வேகமாக ஆணவ கொலைகள் அரங்கேற்றப்படுகிறது. இதில் பல கொலைகள் மீது வழக்குகள் பதியப்படுவதே இல்லை.
தமிழகத்தை பெரிய அளவில் உலுக்கியது
உடுமலைபேட்டை சங்கர் கொலை, திருச்செங்கோடு கோகுலராஜ் கொலை, கடைசியாக நடந்த ஓசூர் நந்தீஷ் -சுவாதி படுகொலை என்று சில படுகொலைகள் மட்டுமே தமிழகம் முழுக்க தெரிந்து இருக்கிறது. இந்த கொலைகள் இல்லாமல் பல ஆணவ கொலைகள் மக்களுக்கும், ஊடகங்களுக்கு தெரியாமல் நடந்துள்ளது, வழக்குகள் மட்டும் பதியப்பட்டுள்ளது.
யார் அதிகம்
இந்த கொலையில் அதிகம் பாதிக்கப்படுவது தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள்தான். இதுவரை கொல்லப்பட்டவர்களில் 90 சதவிகிதம் பேர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். மீதம் உள்ள 10 சதவிகிதம் பேர் ஜாதி மாற்ற திருமணம் காரணமாக கொலை செய்யப்பட்ட இடைநிலை ஜாதியை சேர்ந்தவர்கள். அதேபோல் இதில் கணவனை இழந்த 95 சதவிகித பெண்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
எங்கு அதிகம்
இப்போதெல்லாம் வடக்கு மற்றும் மேற்கு தமிழகத்தில்தான் அதிக அளவில் ஆணவ கொலைகள் அரங்கேறி உள்ளது. கடந்த 2007ம் வருடத்தில் மட்டும் மேற்கு தமிழ்நாட்டில் மொத்தம் 30 ஆணவ கொலைகள் நடந்து உள்ளது. அங்கு திடீர் என்று ஆணவ கொலைகள் அதிகரித்துள்ளது.
ரிப்போர்ட் அளிக்கவில்லை
ஆனால் இதில் பரிதாபமான விஷயம் என்னவென்றால் உச்ச நீதிமன்றம் எல்லா மாநில அரசுகளையும் ஆணவ கொலை குறித்து விவரங்களை அளிக்கும்படி கூறியது. ஆனால் தமிழக அரசு அதுகுறித்து ஆவணத்தை இதுவரை அளிக்கவில்லை. அதாவது மொத்தம் 22 மாநிலங்கள் ஆணவ கொலைகள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு அப்படி எந்த ஆவணத்தையும் தாக்கல் செய்யவில்லை.