நுங்கு சாப்பிட்டால் பெண்களுக்கு..எங்கம்மா பாஜக என்பதால் விமர்சனம் வருது! குலாப் ஜாமூன் புகழ் ஷர்மிகா
சென்னை : குலாப் ஜாமுன் சாப்பிட்டால் 3 கிலோ எடை அதிகரிக்கும், நம்மை விட பெரிய மிருகமான மாடு இறைச்சியை சாப்பிட்டால் செரிக்காது என பேசி சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பிய டாக்டர் ஷர்மிகா சரண் தனது தாய் பாஜகவில் இருப்பதால் தன்னை விமர்சிப்பதாக கூறியிருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடியோ விவகாரத்தில் சிக்கி தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் டெய்சி சரண். பாஜக சிறுபான்மை பிரிவு தலைவரான அவரது மகள் தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பேமஸ் ஆகி இருக்கிறார்.
சித்த மருத்துவர் எனக் கூறிவரும் ஷர்மிகா தொடர்ந்து தற்போது சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேலி கிண்டல்களுக்கு ஆளாகி வருகிறார். இதற்கெல்லாம் காரணம் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி தான்.

ஷர்மிகா சரண்
அவரது தாயார் டெய்சி சரணும் தொலைக்காட்சி மற்றும் யூட்யூப் சேனல்களில் மருத்துவ குறிப்புகளை கூறி பிரபலமானவர்தான் அந்த வகையில் சித்த மருத்துவரான அவரது மகள் ஷர்மிகாகவும் யூட்யூப் சேனல்களில் அறிவியலை தள்ளி வையுங்கள் என பேசி பலத்த சர்ச்சைகளுக்கு உள்ளானார். குறிப்பாக அந்த பேட்டியில் பேசியவர் மாட்டினை நாம் கடவுளாக பார்க்கிறோம். நம்மை விட பெரிய மிருகமான மாட்டுக்கறி சாப்பிட்டால் அது செரிக்காது எனக் கூறினார்.

மருத்துவ டிப்ஸ்
அதைக் கூட விட்டுவிடலாம்.. ஆனால் அதற்குப் பிறகு அவர் பேசிய பேச்சுகள் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆக தான் இருந்தது. கருவுக்காக பாலியல் உறவு வைத்துக் கொள்வதை தாண்டி இயற்கை கடவுள்தான் நமக்கு ஒத்துழைக்க வேண்டும். ஒரு ஆள் செய்த நன்மை தீமையால் வாரிசு இருக்கக் கூடாது என்றால் இருக்காது. ஆனால் நல்ல மனிதராக இருந்தால் குழந்தை பிறந்து விடும் எனக் கூறியது அவரது தாயைப் போலவே அவரும் பேசுகிறாரா என கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

மார்பகப் புற்று நோய்
ஆனால் அதற்குப் பிறகு அவர் பேசிய பேச்சுகள் சொல்லில் அடங்காதவை. குப்புற படுத்தால் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வரும். குலாப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் மூன்று கிலோ எடை கூடிவிடும். நுங்கு சாப்பிட்டால் பெண்களுக்கு மார்பகம் அழகாக வரும் என்பன உள்ளிட்ட அவரது பேச்சுகள் சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து பலரும் அவரை ட்ரோல் செய்ய தொடங்கினர்.

கடும் கண்டனம்
ஒரு கட்டத்தில் அறிவியல் மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராக பேசி வரும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறையின் இணை இயக்குனர் டாக்டர் பார்த்திபனும் எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக பதிலளிக்காமல் இருந்த ஷர்மிகா சரண் தற்போது தனது பேச்சுக்கள் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். சித்த மருத்துவம் மக்களுக்கு போய் சேர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தான் நான் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

சித்த மருத்துவர் தான்
நான் சென்னை சித்த மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்எம்.எஸ் எனப்படும் சித்த மருத்துவ பட்டப் படிப்பு முடித்திருக்கிறேன். ஆனால் சிலர் நான் போலியான மருத்துவர் என்பது போல சொல்லி வருகிறார்கள். சித்த மருத்துவத்தில் தான் படித்ததை தான் சமூக வலைதளங்களில் கூறி வருகிறேன். தமிழ்நாடு அரசு வழங்கிய நோயில்லா நெறி புத்தகத்தில் மாட்டிறைச்சியால் சகல நோய் வரும் எனக் கூறப்பட்டுள்ளது. அதைத்தான் நான் கூறினேன்.

மனித தவறு
உட்கார்ந்து இடத்திலேயே வேலை செய்பவர்கள் தான் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று கூறினேன். ஆனால் என்னை பாஜகவுடன் இணைத்து பேசுகிறார்கள். குலாப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரு நாளில் மூன்று கிலோ எடை கூடும் என நான் சொன்னது ஒரு மனித தவறு தெரியாமல் சொல்லிவிட்டேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அதை வைத்தே எனது பேச்சு முழுவதும் திரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது.

தாய் பாஜக
குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும் என சித்த மருத்துவத்தில் நேரடியாக இல்லாவிட்டாலும் ஆடைகளை தளர்ந்து அணிய வேண்டும் ஒருக்களித்து படுக்க வேண்டும் என இருக்கிறது. அதனால் நான் அப்படி கூறினேன். அதை விடுத்து எல்லாவற்றையும் தவறாக சித்தரிக்க கூடாது. எனது தாய் பாஜகவில் இருப்பதால் எனக்கு கெட்ட பேர் ஏற்படுத்த நினைக்கிறார்கள். ஆனால் இது எல்லாம் தைரியமாக கையாள வேண்டும் என எனது தாய் டெய்சி சரண் கூறியிருக்கிறார்" என ஷர்மிகா சரண் விளக்கமளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications