மதுரை அன்பு ‘ஐடி’ ரெய்டு! ஏ.கே. மட்டுமில்ல.. எஸ்.கே. பட ஷூட்டிங்கும் நிறுத்தம் - 'மாவீரன்' வருவானா?
சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை காரணமாக அஜித் 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு மட்டுமின்றி சிவகார்த்திகேயன் நடித்து வந்த மாவீரன் படத்தின் படப்பிடிப்பும் நின்றுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்டு மாத தொடக்கத்தில் அன்புச்செழியன் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
டெல்லியிலிருந்து வந்த அதிகாரிகள் சென்னை, மதுரையில் உள்ள அன்புச்செழியனின் வீடு, அலுவலகங்கள், சைதாப்பேட்டையில் உள்ள திரையரங்கம், மதுரையில் உள்ள திரையரங்கம் என பல இடங்களில் சோதனை நடத்தினர்..

அறிக்கை
மேலும் மதுரை அன்புவிடம் நிதிபெற்ற திரைப்படங்களை தயாரித்த 20 முன்னணி தயாரிப்பாளர்கள் இந்த வருமான வரித்துறை சோதனையில் உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. 4 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை முடிவடைந்ததை தொடர்ந்து வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் அலசி ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டு இருக்கின்றனர்.

சிண்டிகேட்
இதில் ரூ.200 கோடி முறையற்ற வருவாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், ரூ.26 கோடி ரொக்கம் மற்றும் ரூ.3 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. இதேபோல், தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள் சிண்டிகேட் அமைப்பை உருவாக்கி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை தெரிவித்தது.

நிதி பற்றாக்குறை
வருமான வரித்துறை சோதனை காரணமாக அன்புச்செழியனிடம் நிதி பெற்று தயாரிக்கப்பட்டு வந்த பல திரைப்படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில், ஐடி ரெய்டுக்கு பிறகு அன்புச்செழியன் யாருக்கும் நிதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அஜித் 61 படத்திற்கு தேவையான நிதி இல்லாததால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியானது.

சிவகார்த்திகேயன் படம்
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வந்த மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிக்கும் இதே காரணத்தால் நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது. இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கும் பைனான்ஷியர் பணம் தராததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளதாக சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications