எல்லா பதவியும் உங்களுக்கா? நாங்க எங்க போறது! இபிஎஸ்க்கு உருவான புது ‘சிக்கல்’! ர.ர.க்கள் போர்க்கொடி!
சென்னை : அதிமுகவில் தற்போது புதிய நிர்வாகிகள் பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பால் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஏற்கனவே பல்வேறு பதவிகளை வகித்து வரும் மூத்த நிர்வாகிகளுக்கே மீண்டும் மீண்டும் பரவி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மற்ற நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்திற்கு பிறகு இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றிய எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கியதோடு தனக்கு ஆதரவு நிர்வாகிகளுக்கு துணைப் பொதுச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர் உள்ளிட்ட பதவிகளை அளித்து வருகிறார்.
அந்த அறிவிப்பில் தங்களுக்குப் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த பெரும்பாலான நிர்வாகிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதே போல ஏற்கனவே மாவட்ட செயலாளராக இருந்தவர்கள், முன்னாள் அமைச்சர்கள், தாங்கள் எடப்பாடி தரப்புக்கு விசுவாசமாக இருந்ததால் தங்களுக்கும் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பலர் அது கனவு நிறைவேறவில்லை.

நிர்வாகிகளுக்கு ஏமாற்றம்
உதாரணமாக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாராக நத்தம் ஆர்.விசுவநாதன், மேற்கு மாவட்ட செயலாளராக திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆகியோர் உள்ளனர். இதில் திண்டுக்கல் சி.சீனிவாசனுக்கு தற்போது மாநில பொருளாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் நத்தம் ஆர்.விசுவநாதனுக்கு மாநில துணைப்பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இரண்டு முக்கிய பதவிகளும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தென்மாவட்டத்தை சேர்ந்த பிற சீனியர் நிர்வாகிகளுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

மாநில அளவில் பொறுப்பு
மாநில அளவில் பொறுப்பு பெற்ற இருவரும் மாவட்ட அளவில் உள்ள மாவட்ட செயலாளர் பதவியை விட்டுக்கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு அதிமுக சீனியர் நிர்வாகிகளிடம் ஏற்பட்டுள்ளது. இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., பிளவிற்கு முன்பு இருந்த அதிமுவில் திண்டுக்கல் சி.சீனிவாசன் வழிகாட்டுதல் குழு உறுப்பினர், அமைப்பு செயலாளர் என மாநில அளவில் பொறுப்புக்களை வகித்தபோதும், உள்கட்சி தேர்தலில் மாவட்ட செயலாளர் பதவியை விட்டுத்தரவில்லை.

எதிர்பார்ப்பு
இதேபோல் தான் நத்தம் ஆர்.விசுவநாதனும், மாநில அளவில் ஒழுங்குநடவடிக்கை குழுவில் இருந்தபோதும் மாவட்ட செயலாளர் பதவியை விட்டுத்தரவில்லை. இந்த முறை ஏற்கனவே வகித்த மாநில அளவிலான பதவிகளை விட மதிப்புமிக்க பதவியை இருவரும் பெற்றுள்ளனர் என்பதால் இந்தமுறை இருவரும் மாவட்ட செயலாளர் பதவிகளை கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளுக்கு விட்டுத்தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு திண்டுக்கல் மாவட்ட அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது.

முன்னாள் நிர்வாகிகள் ஏமாற்றம்
இதேபோல கோவையைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணிக்கு தலைமை நிலைய செயலாளர் பதவியும், கேபி முனுசாமிக்கு துணை பொது செயலாளர் பதவியும் அளிக்கப்பட்டுள்ளது. தங்கள் ஆதரவாளர்கள் என்பதற்காக வழிகாட்டுதல் குழு உறுப்பினர், கழக அமைப்பு செயலாளர், துணை பொது செயலாளர், தலைமை நிலைய செயலாளர், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை எடப்பாடி பழனிச்சாமி வாரி வழங்கியிருப்பதாகவும் இதனால் கட்சிக்கு உண்மையாக உழைத்த தொண்டர்களுக்கு மாற்று வழி இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

திடீர் கோரிக்கை
இதையடுத்து தலைமை பதவியை பெற்றவர்கள் மாவட்டங்களில் தங்கள் வகிக்கும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அந்தப் பதவிகளை கட்சிக்காக நீண்ட நாள் உழைத்த சீனியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த தகவல் எடப்பாடி பழனிச்சாமியின் காதுகளுக்கும் எட்டியுள்ளதாகவும். தற்போது பதவிகளை மாற்றி வழங்கினால் பதவி கிடைக்காதவர்கள் அதிருப்தியில் ஓபிஎஸ் பக்கம் செல்லக்கூடும் என்பதால் அதனை தற்போதைக்கு நிறுத்தி வைத்திருக்கிறார். அதே நேரத்தில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் உள்ளிட்ட அறிவிப்புகளும் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications