எத்தனை முறை தட்டினாலும் வாய்ப்பில்லை ராஜா... ஜி.கே.வாசனின் த.மா.கா. இணைப்பு நோ சொன்ன காங். மேலிடம்!
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை இணைக்கும் ஜி.கே.வாசனின் முயற்சிகளை காங்கிரஸ் மேலிடம் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதாம்.
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் கருத்து வேறுபாடுகள் உருவானதால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்கி நடத்தி வருகிறார் ஜி.கே.வாசன். தற்போதைய நிலையில் அதிமுக கூட்டணியில் த.மா.கா. இடம்பெற்றுள்ளது.
ஆனால் த.மா.கா.வை பாஜகவுடன் இணைத்துவிடுங்கள்; மாநில தலைவர் பதவியை வாங்கி கொள்ளுங்கள் என டெல்லி பலமுறை நெருக்கடி கொடுத்துப் பார்த்தது. ஜி.கே.வாசன் தரப்போ, காங்கிரஸுடன் மீண்டும் இணையலாம்- பாஜக வேண்டாம் என்கிற முடிவில் இருந்து வந்தார்.
இதை கூகுளில் தேடாதீங்க.. சைபர் தந்திரங்கள்.. டெபிட், கிரிடிட் கார்டு பற்றி போலீஸ் முக்கிய அலார்ட்
சோனியா ஆலோசனை
இந்த நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல்களை முன்னிட்டு காங்கிரசின் மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் டெல்லியில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் சோனியாகாந்தி. இதில், கட்சியில் ஒற்றுமையில்லை என ஆரம்பித்து பல விசயங்களை குறைப்பட்டுக் கொண்டார் அவர். ஆர்.எஸ்.எஸ். பாஜகவையும் கடுமையாக விமர்சித்தார் சோனியா காந்தி.
இளைஞரணிக்கு தேர்தல்
அத்துடன் தமிழக காங்கிரசின் தலைவராக தங்கபாலுவும், வாசனும் இருந்தபோதுதான் இளைஞரணிக்கு தேர்தல் நடத்தி மாநில தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு உள்கட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால், இளைஞர் காங்கிரசுக்கு தேர்தலை நடத்த சோனியா உத்தரவிட்டுள்ளார்.
சுறுசுறுப்பு
இதனையடுத்து கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளார் கே.எஸ்.அழகிரி. ஆன் லைன் மூலம் இந்த தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கமிட்டியின் பல்வேறு பதவிகளுக்கு அடுத்த ஆண்டு முழு வீச்சில் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இதற்கிடையே, இளைஞரணியின் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவர்கள் உறுப்பினர் சேர்க்கையில் சுறுசுறுப்பை காட்டி வருகின்றனர்.
ஜிகே வாசனுக்கு நோ
இந்த நிலையில், காங்கிரசில் இணைய மீண்டும் சில ரகசிய முயற்சிகளை எடுத்துள்ளாராம் ஜி.கே.வாசன். ஆனால், வழக்கம் போல இதற்கு காங்கிரஸ் தலைமையிடமிருந்து நோ ரெஸ்பான்சாம். ஜி.கே.வாசனுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே மூடிவிட்ட கதவை திறக்கப் போவதே இல்லை என்பதுதான் காங். மேலிடத்தின் திட்டவட்டமான நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.