கொரோனாவில் இருந்து குணமடைந்த ஓபிஎஸ்.. இன்று மாலை வீடு திரும்புவதாக தகவல்.. அடுத்த நடவடிக்கை என்ன?
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ஓ.பன்னீர் செல்வம், இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக கடந்த சில வாரங்களாக தீவிரமாக பணியாற்றி வந்தார் ஓ.பன்னீர் செல்வம். சுற்றுப்பயணம், ஆலோசனை, சட்ட நடவடிக்கைகள் என மிக பிசியாக இருந்த ஓபிஎஸ், தன்னைக் கட்சியிலிருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு அதிகாரம் இல்லை என கூறியதோடு, தன்னை நீக்கியதாக கூறியவர்களை கட்சியிலிருந்து தான் நீக்கி விட்டதாக கூறினார்.

இதனிடையே ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஓய்வில்லாமல் தொடர்ந்து பணியாற்றியதால் உடல் நலனில் போதிய அக்கறையின்றி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அவருக்கு கொரோனா தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய் நோய் தொற்று தீவிரமாக இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறுவது நல்லது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் மருத்துவமனையின் நான்காவது மாடியில் உள்ள ஒரு அறையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் கொரோனா கவச ஆடையுடன் வந்து வாக்களித்தார். தொடர்ந்து அவருக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக கட்சிப் பணிகளில் தீவிரம் காட்ட முடியாமல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓ.பன்னீர் செல்வம், பூரண குணமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உடன், வழக்கு விவகாரங்கள் தொடர்பாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நாளை எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்லவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் தரப்பில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications