பாயின்ட்! எல்லா அமைச்சர்களும் இதே ரூட்ல போகலாமே.. வேலுமணி கேஸ் தவறான முன்னுதாரணம்.. கேசிபி ஒரே போடு!
சென்னை : ஒரு முறைக்கு மேல் விசாரணை நடத்தக்கூடாது என்று கூறி எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்துள்ளது மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும் என எச்சரித்துள்ளார் கே.சி.பழனிசாமி.
அதிமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்க்கில், அப்போது நடந்த விசாரணையில் எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகாருக்கு முகாந்திரமில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்தது.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அதற்கு மாறான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, இனி யார் ஊழல் செய்தாலும் தங்கள் ஆட்சியிலேயே ஒரு வழக்கை பதிவு செய்து, முகாந்திரம் இல்லை என விசாரணை நடத்தி தெரிவித்து விட்டால் தப்பித்துக்கொள்ளலாம் என வழிகாட்டுவது போல இருப்பதாக கேசி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஒண்ணு சாதகம்.. இன்னொண்ணு பாதகம்.. வேலுமணி மீதான டெண்டர் வழக்கு ரத்தானது எப்படி? சொல்கிறார் இன்பதுரை!
வேலுமணி டெண்டர் முறைகேடு
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அப்போதைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில், டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி பொன்னி ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை கைவிடுவது என அரசு முடிவு செய்தது.
2 வழக்குகள்
இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு தொடர்பாகவும், வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் குற்றம்சாட்டி இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடந்தது.
2 விசாரணை அறிக்கைகள்
இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள், வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர். அதேசமயம், அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்து, இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். முந்தைய ஆட்சியில் எஸ்.பி பொன்னி அளித்த அறிக்கையில், எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என தெரிவித்திருந்தததையும் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கங்காதர் அளித்த அறிக்கையில் எஸ்.பி.வேலுமணியை வழக்கில் சேர்த்து அறிக்கை அளித்துள்ளததையும் தீர்ப்பில் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் இசைக்கு ஏற்ப நடனமாடக்கூடிய வேலையைத்தான் காவல்துறையினர் செய்கின்றனர் என்பது இந்த வழக்கில் தெளிவாகிறது எனச் சாடிய நீதிபதிகள், எஸ்.பி.வேலுமணிக்கு நற்சான்று வழங்குவதற்காக இந்த நீதிமன்றம் இல்லை என்றும் குறிப்பிட்டனர். மேலும், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு எஸ்.பி.வேலுமணி மீது அவசர கதியில் வழக்கு பதிவு செய்தது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசியல் தலையீடு
காவல்துறை அதிகாரத்தை ஒரு சாராருக்கு ஆதரவாக பயன்படுத்தும்போது நீதிமன்றத்தால் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், காவல்துறையில் அரசியல் மற்றும் அரசு தலையீடு இருக்கக்கூடாது என்கிற உச்ச நீதிமன்ற உத்தரவை அரசுகள் அமல்படுத்தாததால், அரசியல் கட்சியினருக்கு எதிராக தாக்கல் செய்யக்கூடிய வழக்குகளில் நீதிமன்றங்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் போல செயல்பட வேண்டிய நிலை இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
கேசிபி பாயின்ட்
இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு ரத்து செய்யப்பட்டிருப்பது பற்றி அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி தனியார் ஊடகத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் பேசியுள்ள அவர், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, இனி யார் ஊழல் செய்தாலும் தங்கள் ஆட்சியிலேயே ஒரு வழக்கை பதிவு செய்து, முகாந்திரம் இல்லை என விசாரணை நடத்தி தெரிவித்து விட்டால் தப்பித்துக்கொள்ளலாம் என வழிகாட்டுவது போல இருப்பதாக கேசி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தவறான முன்னுதாரணம்
அதிமுக ஆட்சிக் காலத்தில் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் விசாரித்த பொன்னி ஐபிஎஸ், முகாந்திரம் இல்லை என கூறியிருப்பதால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தற்போது அவர் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்யக்கடாது என நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டு செல்லக்கூடும். உச்சநீதிமன்றத்தில் இந்த உத்தரவு மாற்றி அமைக்கப்படாவிட்டால் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.
அவர்களே ஒரு வழக்கு போட்டு
தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா அமைச்சர்களுமே தங்கள் ஆட்சி இருக்கும்போதே யாரோ ஒருவரை வைத்து புகார் கொடுக்க வைத்து, தங்கள் ஆட்சியின்போதே அதனை விசாரித்து, தவறு நடக்கவில்லை என்கிற அறிக்கையை தயார் செய்து உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் போட்டு எந்த தவறும் இல்லை எனச் சொல்லிவிட்டால், அடுத்து மாற்றுக்கட்சி ஆட்சிக்கு வரும்போதும், முந்தைய ஆட்சியாளர்கள் செய்த தவறுகள் மறைக்கப்பட்டு விடலாம் என்கிற ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்.
சேஃப்டியாக
நீதிமன்றம், ஊழலுக்கு எதிரான பல்வேறு தீர்ப்புகளை வழங்குகிறது. அப்படி இருக்கும்போது இதுபோன்ற நுட்பமான விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும். ஒரு டெண்டரை அமைச்சர்களின் உறவினர்களே எடுக்கிறார்கள் எனும்போது துறையின் அமைச்சருக்கு முறைகேட்டில் சம்பந்தம் இல்லை என்றால் எப்படி? இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டால் ஒவ்வொரு அமைச்சரும், தங்கள் ஆட்சியிலேயே ஒரு வழக்கை பதிவு செய்து, முகாந்திரம் இல்லை என தங்களுக்கு வேண்டிய காவல்துறை அதிகாரியை வைத்து விசாரணை நடத்தி விட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது பாதுகாப்பாக இருக்கும் எனக் கருதும் நிலை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.