‘யார்கிட்ட..?’ சைலண்டா பதில் சொன்ன வேலுமணி.. ‘9 பேர்’.. சான்ஸே இல்ல.. அணிவகுத்த எம்.எல்.ஏக்கள்!
சென்னை : கோவையைச் சேர்ந்த சில அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுக பக்கம் தாவுவார்கள் என்ற தகவல் சிறகடித்து வரும் நிலையில், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை எனச் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் எஸ்.பி.வேலுமணி.
அதிமுகவில் உட்கட்சி மோதல் தீவிரமாக நடந்து வரும் நிலையில், எதிர் தரப்பு எம்.எல்.ஏக்களை தங்கள் அணிக்கு இழுப்பதில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையே, அதிமுகவில் நிலவும் ஸ்திரமற்ற சூழலைப் பயன்படுத்தி, எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் கொண்டு வர திமுகவும் வலுவாகக் காய்நகர்த்தி வருகிறது.
அந்தவகையில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் திமுக ஆதரவு நிலைக்குச் செல்ல இருக்கிறார்கள் என்ற தகவல் கடந்த சில நாட்களாகத் தீவிரமாகப் பரவி வருகிறது.

எதிர்காலம் குறித்த யோசனையில்
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி மோதல் காரணமாக நிர்வாகிகள், அடிமட்டத் தொண்டர்கள் கடுமையான அப்செட்டில் உள்ளனர். அதிமுக யாருக்கு என ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் நீதிமன்றத்தையும் தேர்தல் ஆணையத்தையும் மாறி மாறி நாடி வருவதால், நிர்வாகிகள் பலர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், அரசியல் எதிர்காலம் கருதி முக்கிய முடிவை எடுக்கும் யோசனையில் இருந்து வருகின்றனர்.

திமுக தீவிர முயற்சி
ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதலால் லேசான அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் திட்டத்தில் திமுக தரப்பு இறங்கியுள்ளது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில், திமுகவின் பலத்தைப் பெருக்குவதற்காக, கொங்கு மண்டல அதிமுக எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் கொண்டு வர திமுக தீவிரமாக முயன்று வருகிறது.

முன்னாள் எம்.எல்.ஏக்கள்
சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்றார். கோவையில் பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் கோவையில் தொடங்கி வைத்தார். பொள்ளாச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் உட்பட 50 ஆயிரம் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர். இதற்கான வேலையை பக்காவாக செய்து முடித்திருந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

3 சிட்டிங் எம்.எல்.ஏக்கள்
இந்த நிலையில்தான் கோவை மாவட்டத்தில் உள்ள 3 சிட்டிங் அதிமுக எம்எல்ஏக்களை திமுக தங்கள் பக்கம் இழுக்கப் போவதாக ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 9 அதிமுக எம்எல்ஏக்களில் 3 பேர் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க இருப்பதாகவும், அதன் மூலம் அவர்கள் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்றும் கூறப்பட்டது.

கொளுத்திப்போட்ட எம்.பி
தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமாரும், இது பற்றி மறைமுகமாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனால், கோவை அதிமுகவில் சலசலப்பு நிலவி வந்தது. இன்று கூட, கொங்கு மண்டலத்திலிருந்து அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் திமுகவில் இணைய உள்ளனர். அதற்கான பேச்சு வார்த்தை நடந்துக்கொண்டு உள்ளது என திமுக எம்.பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

வேலுமணி கோட்டை
கோவையைச் சேர்ந்த அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களுமே முன்னாள் அமைச்சரும், ஈபிஎஸ்ஸின் வலதுகரமும் ஆன எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்கள் ஆவர். கொங்கு மண்டலத்தில், அதிமுகவின் பெரும் தூணாக இருக்கும் எஸ்.பி.வேலுமணி, அவ்வளவு எளிதில், தனது ஆதரவாளர்களை பறிகொடுக்க மாட்டார் என்றும் பேசப்படுகிறது. அதேநேரம், இந்த ஆட்டம் செந்தில் பாலாஜி vs வேலுமணி என்பதால், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையும் இருக்கிறது.

வேலுமணிக்கு கௌரவ பிரச்சனை
வேலுமணிக்கு இது கௌரவப் பிரச்சனையாகவும் பார்க்கப்படுகிறது. அதிமுகவில் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார் வேலுமணி. வேலுமணியின் கோட்டையில் ஓட்டை விழுந்தால், அது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பெரிய அடியாக கருதப்படும். எனவே, திமுக எவ்வளவு பேச்சுவார்த்தை நடத்தினாலும், கோவை எம்.எல்.ஏக்களை வேலுமணி தக்கவைத்துக் கொள்வார் எனக் கூறப்பட்டது.

ஆட்சியர் அலுவலம் சென்ற எம்.எல்.ஏக்கள்
இந்நிலையில் தான், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 9 அதிமுக எம்.எல்.ஏக்களும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். எஸ்.பி.வேலுமணி தலைமையில் வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள், முதல்வர் ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளின்படி, தங்கள் தொகுதியில் இருக்கும் 10 முக்கியமான பிரச்சனைகள் அடங்கிய பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

கூட்டமாக
ஸ்டாலினை சந்தித்து திமுக ஆதரவு நிலை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள், வேலுமணி தலைமையில் கூட்டமாக, ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். எஸ்.பி.வேலுமணியுடன், பொள்ளாச்சி ஜெயராமன்,
அம்மன் அர்ஜுனன், அருண்குமார், தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி, டி.கே.அமுல் கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம் ஆகிய 8 எம்.எல்.ஏக்களும் உடன் சென்றனர்.

கொக்கரிக்கும் கோவை அதிமுக
திமுகவுக்கு தாவுவார்கள் என திமுக எம்.பியே தொடர்ந்து கூறி வரும் நிலையில், கோவையின் அத்தனை அதிமுக எம்.எல்.ஏக்களும் மொத்தமாக கூடி, வேலுமணிக்குப் பின்னால் அணிவகுத்தது அதிமுகவினர் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது. பார்த்தீங்களா, பரவும் தகவலுக்கு ஆரவாரம் இல்லாம பதில் சொல்லிட்டாரு.. வேலுமணி கோட்டையில் இருந்து சிட்டிங் எம்.எல்.ஏக்கள் யாரையும் நகர்த்த முடியாது என கொக்கரிக்கிறார்கள் கோவை அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications