பஸ் ஓட்டையில் இருந்து விழுந்து பலியான சிறுமி ஸ்ருதி..8 பேரும் விடுதலை..செங்கல்பட்டு கோர்ட் உத்தரவு
பஸ் ஓட்டையில் இருந்து விழுந்து உயிரிழந்த சிறுமி ஸ்ருதி மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தாம்பரம் அருகே தனியார் பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழந்த சிறுமி ஸ்ருதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பள்ளி தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு சென்னை புறநகரான சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுமி ஜூலை 25 2012 ஆம் ஆண்டு பள்ளி பேருந்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். எந்த பேருந்தில் தனது மகளை ஆசையாக பள்ளிக்கு அனுப்பி வைத்தார்களோ அந்த பேருந்தே ஸ்ருதிக்கு எமனாக மாறியது.

பேருந்தில் இருந்த ஓட்டையை பலகை வைத்து மறைத்திருந்தார் டிரைவர். பள்ளி மாணவிகளின் உயிரை கருத்தில் கொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டார் டிரைவர். குழந்தைகள் செல்லும் பேருந்தை சரியாக பராமரிக்காத பள்ளி நிர்வாகம், இவ்வளவு மோசமான பேருந்துக்குத் தகுதிச் சான்றிதழ் வழங்கிய வாகன ஆய்வாளர் இவர்கள் அனைவரின் கவனக் குறைவு தான் சிறுமி ஸ்ருதியின் மரணத்திற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
2012ஆம் ஜூலை 25 ஆம் தேதி சிறுமி ஸ்ருதி உயிரிழந்தார். விபத்து நிகழ்ந்த பேருந்தை மக்கள் எரித்தனர். பள்ளி முன் நின்று போராட்டம் நடத்தினர். சிறுமி ஸ்ருதியின் மரணத்துக்குப் பலர் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த சம்பவம் நடந்த சமயத்தில் எல்லோரும் கைது செய்யப்பட்டார்கள். பள்ளி வாகனங்களில் முறையாகப் பாதுகாப்பைக் கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். இந்த உத்தரவு வந்த பிறகு பள்ளி வாகனங்களை எல்லாம் வாகன ஆய்வாளர்கள் தீவிரமாகச் சோதனையிட்டனர். ஒரு இறப்புக்கு பிறகு தான் சோதனைகளும், கட்டுபாடுகளும் அதிகரித்தது.

சில மாதங்கள் கழித்து கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் விடுதலையானார்கள். செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. மகளை இழந்த துக்கம் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் தன் மகளைக் கொன்றவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவில்லை என்கிற ஆவேசமும் சிறுமியின் பெற்றோர்களிடம் இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பள்ளி நிர்வாகம் உடனடியாக ஐந்து லட்சம் கொடுக்க வேண்டுமென உத்தரவிட்டனர். ஆனால் அந்த இழப்பீடும் ஸ்ருதியின் குடும்பத்துக்கு சென்று சேரவில்லை.
பல ஆண்டு காலமாக நடைபெற்ற இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சிறுமி ஸ்ருதி மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிறுமி இறந்து 11 வருடங்கள் ஆகிவிட்டது. இன்று வரை அவரின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனையை சிறுமியின் பெற்றோர்களால் வாங்கி தர முடியவில்லை என்பதுதான் சோகம். பள்ளி தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி காயத்ரி தீர்ப்பு அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications