தேவர் குருபூஜை.. அக்டோபர் 30ல் பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! பிரதமர் மோடி வருகிறாரா?
சென்னை: முத்துராமலிங்க தேவரின் 115வது குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28, 29, 30 ஆகிய 3 நாட்களில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரை முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அக்டோபர் 30ஆம் தேதி அன்று பசும்பொன் வந்து மரியாதை செலுத்துவார்கள்.

ஏற்பாடுகள்
இந்த நிலையில் இந்தாண்டு நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது பசும்பொன்னில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் தற்போது தமிழ்நாடு காவல்துறையும் அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யத் தொடங்கிவிட்டது.

பிரதமர் மோடி
ஏராளமான முக்கிய அரசியல் பிரமுகர்கள் பங்கேற்கும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரதமர் மோடியின் பசும்பொன் பயணத் திட்டம் ஏறக்குறைய உறுதியாகிவிட்டதை தொடர்ந்து தேவர் குருபூஜை தொடர்பான பேச்சுக்கள் தமிழகத்தில் இப்போதே எழத்தொடங்கிவிட்டன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற தேவர் குருபூஜை நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டு இருக்கிறார். இந்த நிலையில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெற இருக்கும் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்ள உள்ளார்.

முதலமைச்சர் பயண திட்டம்
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியில் கலந்துகொள்வதற்காக அக்டோபர் 29 ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து மதுரை புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 30 ஆம் தேதி காலை 9 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு செல்கிறார். பிரதமர் மோடியும் இதே நாளில் அங்கு வருவதாக கூறப்படுவதால் இந்த நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications