சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு ஜெயலலிதாவையே மிஞ்சிய ஸ்டாலின்
தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையே மிஞ்சிவிட்டார் ஸ்டாலின் என்ற பேச்சு அடிபடுகிறது.
சென்னை: தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கார சார விவாதங்களுடன் ஒரு மாதம் முடிந்துள்ளது. ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கை தட்டல்களுக்கு இடையே 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் அமைச்சர்களுக்கு கூட நேரம் கொடுக்காமல் அதிக அளவில் 110 விதியின் அறிவிப்பு வெளியிடுவார். முதல்முறையாக முதல்வராகியுள்ள மு.க ஸ்டாலின் ஜெயலலிதாவையே மிஞ்சும் வகையில் 110 விதியின் எக்கச்சக்க அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் என்று ஆளுங்கட்சி அமைச்சர்களே கூறத் தொடங்கியுள்ளனர்.
முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் ஆகியோரது ஆட்சிக்காலங்களில் அவசர காலங்களின் போதும் முக்கியமான வளர்ச்சி திட்டங்களில் அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவுமே பயன்படுத்தப்பட்டன. அப்போதெல்லாம் பெரும்பாலும் பட்ஜெட் அறிவிப்பின் போதே திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் திட்டங்கள் பற்றி அவை உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கவோ, விவாதிக்கவோ முடியாது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒருமுறை சட்டசபையில் பேசும் போது, 110 விதியை தினமும் பயன்படுத்தினால் அது 420 ஆகிவிடும் என்று கூறியிருந்தார். முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளுக்காக மட்டுமே 110 விதியை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி.
டெல்டா வைரஸை கண்டறிய வெளிமாநிலம் செல்ல வேண்டாம்.. கொரோனா சங்கிலியை உடைக்க ஸ்டாலின் புதுவியூகம்
110 அறிவிப்பில் சாதனை
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சட்டசபையில் தினமும் 110விதியின் கீழ் ஏதாவது அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டே இருப்பார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது 1991 முதல் 1996 வரையிலான ஆட்சிக்காலத்திலோ அல்லது 2001 - 2006 ஆட்சிக்காலத்திலோ 110 விதியை பெரிய அளவில் பயன்படுத்தவில்லை. 2011 முதல் 2016 வரையிலான ஆட்சிக்காலத்தில் 110 விதியின் கீழ் 1,72,196 கோடி ரூபாய் செலவில் 187 அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது சபாநாயாகராக இருந்த தனபால் 2011 முதல் 2015 வரையிலான ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் 181 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன என தெரிவித்து அதனை கின்னஸ் சாதனை என பாராட்டினார். ஜெயலலிதாவைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சிக்காலத்தில் 110 விதியின் கீழ் 453 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
சட்டசபையில் 110 அறிவிப்புகள்
ஜெயலலிதாவின் பாணியை பின்பற்றி முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த ஒரு மாத காலத்தில் 110 விதியின் கீழ் தினசரியும் ஏதாவது ஒரு அறிவிப்பினை வெளியிட்டு பேசியிருக்கிறார். 110 விதியின் கீழ் மெரினா கடற்கரையில் கலைஞருக்கு ரூ.39 கோடி செலவில் நினைவிடம் கட்டப்படும், அயோத்திதாசருக்கு மணிமண்டபம், பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும், பஞ்சு மீதான ஒரு சதவிகிதம் சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
அரசியல் நோக்கர்கள் விமர்சனம்
தற்போது முதல்வராக உள்ள மு.க ஸ்டாலின் எதிர்கட்சித்தலைவராக இருந்த போது, 110 விதியினைப் பயன்படுத்தி அவையில் முதல்வர் அறிவித்த உறுதிமொழிகள், வாக்குறுதிகள் எல்லாம் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன, எவையெல்லாம் நிலுவையில் இருக்கின்றன, எத்தனை அரசாணைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன என்று கேள்வியெழுப்பியுள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேறியதா? எத்தனை திட்டங்கள் நிலுவையில் இருக்கின்றன என்பது குறித்து அறிந்துகொள்ள வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இப்போது அவரே முதல்வரான பின்னர் தினசரியும் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் என்ற விமர்சனமும் எழாமல் இல்லை.
நிதி ஒதுக்கப்பட்ட திட்டங்கள்
கடந்த அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என விமர்சித்துள்ளார் தற்போதய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன். இந்த விதியின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்படாத திட்டங்கள் குறித்து இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Recommended Video
110 விதி என்றால் என்ன?
பொதுவாக மக்களுக்காக கொண்டுவரப்படும் எந்த ஒரு திட்டமும் அமல்படுத்தப்படும் முன்பு சட்டமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்படும். ஆனால் பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனைக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் அரசால் முன்மொழியப்படும் திட்டம் குறித்து சட்டசபையில் உறுப்பினர்கள் விவாதித்தால் நேரம் வீணாகும் அல்லது அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடும் என அரசு கருதும் போது 110 விதியை பயன்படுத்தலாம். அப்படி 110-விதியின் கீழ் அறிவிக்கப்படும் திட்டங்கள் பற்றி அவை உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கவோ, விவாதிக்கவோ முடியாது.
நிதி ஒதுக்கீடு
முதல்வர் மு.க ஸ்டாலின் தற்போது 110 விதியின் கீழ் அறிவித்துள்ள பல்வேறு அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிட்டு நிதி ஒதுக்கீடு செய்தால் மட்டுமே அந்த அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வரும். இல்லாவிட்டால் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்னது போல அது வெற்று அறிவிப்புகளாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும்.