ஆட்டோ சின்னம் கேட்ட விஜய் மக்கள் இயக்கம்.. மறுப்பு தெரிவித்த மாநில தேர்தல் ஆணையம்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு ஆட்டோ சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆட்டோ சின்னத்தை ஒதுக்குமாறு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாநில தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தேர்தல் ஆணையத்தில் கட்சியையோ அல்லது அமைப்பையோ பதிவு செய்திருந்தால் மட்டுமே ஒதுக்க முடியும் என கூறி ஆட்டோ சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இடப்பங்கீடு கோரிக்கை வைத்த திருமாவளவன்!
விஜய் அரசியல்
விஜய்யை அரசியலுக்கு வருமாறு ரசிகர்கள் நீண்ட நாளாக அழைத்து வருகிறார்கள். அதிலும் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அதில் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த அரசியல் கட்சி தொடங்கி 2021 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது எஸ்ஏசியின் விருப்பம். ஆனால் விஜய்யோ "நமக்கான ரயில் வந்தவுடன் ஏறினால்தான் நமது இலக்கை அடைய முடியும்" என கூறி மறுத்துவிட்டதாக தெரிகிறது.
விஜய்யின் இலக்கு 2026 தேர்தலா
இந்த நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் போட்டியிடுவதற்கான முன்னோட்டமாகவே இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் இருந்ததாகவே ரசிகர்களும் அரசியல் நிபுணர்களும் கருதினர். விஜய்யின் புகைப்படத்தையும் இயக்கக் கொடியையும் வைத்தே இந்த தேர்தலில் இத்தனை உயரத்தை அடைந்த நிலையில் விஜய்யே போட்டியிட்டால் நிச்சயம் தெறி வெற்றிதான் என ரசிகர்கள் கொண்டாடினர்.
சிக்ஸர் அடித்த விஜய் மக்கள் இயக்கம்
முதல் தேர்தலிலேயே சிக்ஸர் அடித்ததால் விஜய்யும் மகிழ்ச்சியில் இருந்ததாகவே சொல்லப்பட்டது. இதையடுத்து வெற்றியாளர்களை அழைத்து அவர்களை பாராட்டி குரூப் புகைப்படமும் எடுத்துக் கொண்டார் விஜய். இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட அனுமதி கிடைத்தது. இந்த தேர்தலில் விஜய் புகைப்படம், இயக்க கொடி ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.
ஆட்டோ சின்னம்
உள்ளாட்சி தேர்தலில் போட்டி குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்றைய தினம் பனையூர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆட்டோ சின்னத்தை ஒதுக்குமாறு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாநில தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தேர்தல் ஆணையத்தில் கட்சியையோ அல்லது அமைப்பையோ பதிவு செய்திருந்தால் மட்டுமே ஒதுக்க முடியும் என கூறி ஆட்டோ சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.