ஸ்டாலின் வைத்த கோரிக்கை.. உடனே நேர நீட்டிப்பு செய்த முதல்வர்.. கடைகளில் அலைமோதிய கூட்டம்
சென்னை: நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும், சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் மதியம் 3 மணிவரை கடைகளை திறக்க அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அங்கு மக்கள் கூட்டம் அலை மோதியது.
Recommended Video
சென்னை, மதுரை, கோவையில், ஏப்ரல் 26ம் தேதியான, நாளை, ஞாயிறு காலை 6 மணி முதல், ஏப்ரல் 29ம் தேதி புதன் இரவு 9 மணி வரை முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும்.

சேலம், திருப்பூர் ஆகிய நகரங்களில் ஏப்ரல் 26ம் தேதியான நாளை முதல், ஏப்ரல் 28 வரை முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். இவ்வாறு தமிழக அரசு நேற்று அறிவித்தது.
இதையடுத்து, மருத்துவமனை, மெடிக்கல் போன்ற மருத்துவம் சார்ந்த பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும். காவல்துறை, வருவாய் பேரிடர், உள்ளாட்சி, குடிநீர் வழங்கல், மின்சார துறை உள்ளிட்ட அத்தியாவசியத் துறைகள் மட்டுமே செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் நகரங்களில் இன்று பல்வேறு சூப்பர் மார்க்கெட் கடைகளில் காலை முதல் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நிற்க வைக்கப்பட்டனர். மதுரை காய்கறி மார்க்கெட்டில் சமூக இடைவெளியின்றி மக்கள் பொருட்களை வாங்கினர்.
இதை கருத்தில் கொண்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், பல இடங்களுக்கு 26ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் இன்று கடைகளில் மக்கள் கூட வாய்ப்புள்ளது. நெரிசலைத் தவிர்க்கும் வகையில், இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து, மக்கள், தனிமனித விலகலுடன் பொருட்களை வாங்கிட உரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். மதியம் 1 மணிவரைதான் கடைகள் திறக்க வேண்டும் என்பது அரசின் உத்தரவு என்பதால், நேர நீட்டிப்புக்கு ஸ்டாலின் கோரிக்கைவிடுத்தார்.
இந்த நிலையில்தான், ட்விட்டர் பதிவு வெளியான சில நிமிடங்களில், மதியம், 3 மணிவரை மேற்கண்ட நகரங்களில் அத்தியாவசிய கடைகளை திறந்து வைக்க, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேர நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பித்தார். இருப்பினும் இந்த நேர நீட்டிப்பால் பெரிய பலன் கிடைக்கவில்லை. இதற்கு பதிலாக இரவு 8 மணிவரையிலாவது காய்கறி, மளிகை கடைகளை திறந்து வைக்க கூறியிருந்தால், வெயில் குறைந்த பிறகு மக்கள் சென்று வாங்க வசதியாக இருந்திருக்கும். ஆனால், அரசு நேர நீட்டிப்பால் வெயிலில்தான் கியூவில் மக்கள் நின்று பொருள் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications